உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்றைய உலகம் முழுக்க முழுக்க பணத்தை சுற்றித்தான் இயங்குகிறது. உலகின் வலிமையான கரன்சி என்று வரும்போது நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அமெரிக்க டாலர்தான். அமெரிக்க டாலரைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பவுண்ட் அல்லது யூரோ ஆகியவையே நினைவுக்கு வரும். ஆனால் உண்மை இதற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். இந்தியர்கள் அதிகம் வசிக்கும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அதிகளவில் வேலைக்குப் போகும் நாடுகளில் ஒன்றுதான் உலகின் மிகவும் மதிப்புமிக்க கரன்சியைக் கொண்டுள்ளது. இந்த பதிவில் உலகின் வலிமையான நாணயம் எது மற்றும் அது எப்படி வலிமையான நாணயமாக உள்ளது என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Which Is the Strongest Currency in the World

உலகின் வலிமையான கரன்சி உள்ள நாடு எது?

உண்மையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் தினார் (KWD) தான் உலகின் மிக அதிக மதிப்புமிக்க மற்றும் வலிமையான கரன்சியாகும். தற்போது, ​​ஒரு குவைத் தினார் ஏறக்குறைய 3.25 அமெரிக்க டாலருக்கும் அல்லது 300 இந்திய ரூபாய்க்கும் அதிகமான மதிப்பைக் கொண்டுள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள குவைத் ஒரு சிறிய நாடாகும். இந்த பணக்கார சிறிய நாடு தனது வருவாயில் பெரும்பகுதியை எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் பெறுகிறது, இதுவே உலகச் சந்தைகளில் அதன் நாணயம் சிறப்பான வலிமையைத் தக்கவைத்துக்கொள்ள முக்கிய காரணமாக உள்ளது.

ஒரு நாட்டின் கரன்சியை வலிமையாக்குவது எது?

மற்ற நாணயங்களுடன் ஒப்பிடுகையில் அதிக வாங்கும் திறன் கொண்ட ஒரு நாணயம் 'வலிமையான நாணயம்' எனக் கருதப்படுகிறது. உதாரணமாக, 1 அமெரிக்க டாலரைக் கொண்டு வாங்கக்கூடிய பொருட்களை 1 இந்திய ரூபாயைக் கொண்டு வாங்க முடியாது. ஏனெனில், 1 அமெரிக்க டாலர் என்பது கிட்டதட்ட 94 ரூபாயாகும். ஒரு நாணயத்தின் வலிமையானது, அந்த நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, பணவீக்கக் கட்டுப்பாடு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. ஒரு நாட்டின் நாணயம் எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அந்தப் பொருளாதாரத்தின் மீது முதலீட்டாளர்களுக்கும் உலகச் சந்தைகளுக்கும் அவ்வளவு நம்பிக்கை இருக்கும்.

குவைத்தின் தினார் ஏன் வலிமையாக உள்ளது?

குவைத் தினாரின் வலிமையாக இருப்பதற்கு முக்கியக் காரணம் குவைத்தில் உள்ள அளவில்லாத பெட்ரோலிய இருப்புக்களே ஆகும். உலகின் ஆறாவது மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்ட நாடாக குவைத் உள்ளது. குவைத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதியும், அதன் ஏற்றுமதி வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கும் எண்ணெய் விற்பனை மூலமே கிடைக்கின்றன. இது முக்கியமாக அமெரிக்க டாலர்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதுடன், குவைத்தின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துகிறது.

புத்திசாலித்தனமான நாணயக் கொள்கை

குவைத் அரசாங்கம் தனது கரன்சியின் விநியோகத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம், கரன்சியின் தேவை சீராகவும், விநியோகம் குறைவாகவும் இருக்கும்போது நாணயத்தின் மதிப்பு உயர்வாக இருப்பதை உறுதி செய்கிறது. குறைந்த பணவீக்கத்துடன் குவைத்தின் பொருளாதாரம் நிலையாக உள்ளது. மேலும், அந்நாட்டின் 'தினார்' நாணயம் அமெரிக்க டாலருடன் மட்டும் இணைக்கப்படாமல், பல்வேறு நாணயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் முதலீடு

குவைத் முழுமையாக எண்ணெய் வளத்தை மட்டும் சார்ந்திருக்கவில்லை. உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய அரசு நிதிகளில் ஒன்றான 'குவைத் முதலீட்டு ஆணையம்' (KIA) அங்கு உள்ளது. குவைத் அரசு தனது பெருமளவிலான எண்ணெய் வருவாயை உலகளாவிய பங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற வெளிநாட்டுச் சொத்துக்களில் முதலீடு செய்கிறது.

குவைத் தினார் அதிக மதிப்புமிக்க நாணயமாக இருந்தாலும், அது மிகவும் வலிமையான அல்லது பரவலாகப் பயன்படுத்தப்படும் நாணயம் அல்ல. உலக வர்த்தகம், கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் மற்றும் சர்வதேச கையிருப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் அமெரிக்க டாலரே உலகின் சக்திவாய்ந்த நாணயமாக உள்ளது.

Story first published: Friday, September 4, 2026, 22:51 [IST]
Desktop Bottom Promotion