நவராத்திரி 2019: முப்பெரும் தேவியரை போற்றும் வழிபாடு - என்ன தானம் தரலாம்

நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை முடிந்து மறுநாள் பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்கள் கொண்டாடப்படும் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த பத்து நாட்களும் கோவில்களில் மட்டுமல்ல வீடுகளிலும் பண

சிவனை வழிபட ஒரு ராத்திரி சிவராத்திரி இது மாசி மாதம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகின்றோம். சக்தியை வழிபட ஒன்பது ராத்திரி நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நவம் என்பது ஒன்பது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாதான். இது அம்மனுக்கு 9 நாட்கள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம். இந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது அக்டோபர் 8-ஆம் விஜயதசமியுடன் பண்டிகை முடிகிறது.

நவராத்திரி பண்டிகை நான்கு காலங்களில் கொண்டாடப்படுகிறது. ஆனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வாராஹி நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி. தை மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி. பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி. இந்த நான்கு நவராத்திரிகளில் சாரதா நவராத்திரி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கொண்டடப்படுகிறது. வசந்த நவராத்திரி மேற்கு வங்காளம் குஜராத் போன்ற சில மாநிலங்களிலும் வாராஹி நவராத்திரியும் சியாமளா நவராத்திரியும் சில ஊர்களிலும் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது.

Navratri

நவராத்திரி பண்டிகை கொண்டாடுவதால் முப்பெரும் தேவியர்களின் அருள் கிடைக்கும். புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்களும் பண்டிக்காலம்தான். நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் ஏன் தெரியுமா? ராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள். துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள்.

அடுத்த மூன்று நாட்கள் மலைமகளான செல்வத்திற்கு அதிபதியும் கடைசி மூன்று நாட்கள் கலைமகள் கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவியையும் வணங்குகின்றோம். நவராத்திரி கொண்டாடப்படும் நாட்களில் தினமும் பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வந்திருக்கும் பெண்களுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்குவார்கள். எந்தப் பொருட்களைத் தானமாக வழங்குகிறார்களோ, அந்தப் பொருட்களுக்கு எந்தக் காலத்திலும் எப்போதும் எவரிடமும் கையேந்தத் தேவையில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். எந்தந்த நாளில் என்ன மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கலாம் என்றும் தாத்பரியம் தெரிவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகேஸ்வரி அலங்காரம்

மகேஸ்வரி அலங்காரம்

புரட்டாசியில் வரும் மகாளயபட்ச அமாவாசைக்கு அடுத்த நாளாகிய பிரதமை திதியிலிருந்து துவங்கி நவமி வரையாகிய ஒன்பது நாட்களும் பல்வேறு ரூபங்களில் அம்பிகை நமக்கு அருள்பாலிக்கிறாள். நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.

ராஜராஜேஸ்வரி

ராஜராஜேஸ்வரி

துவிதியை இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி தேவியாக போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும்.

மூன்றாம் நாள் வாராகி

மூன்றாம் நாள் வாராகி

திரிதியை மூன்றாவது நாளுக்கு உரிய வாராகி அன்னை, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

மகாலட்சுமி

மகாலட்சுமி

சதுர்த்தி - நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். ஐந்தாம் நாளான பஞ்சமி தினத்தில் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை.

இந்திராணி அலங்காரம்

இந்திராணி அலங்காரம்

சஷ்டி ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. இவள் விரும்புவது தேங்காய் சாதம் படைக்கலாம்.

மகாசரஸ்வதி

மகாசரஸ்வதி

சப்தமி ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிபடலாம். அஷ்டமி எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, சர்க்கரை பொங்கல் படையல் இட்டு வழிபடலாம்.

விஜயதசமி

விஜயதசமி

நவமி ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபடலாம். பத்தாவது நாள் விஜயதசமி. விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.

மாங்கல்ய பலம் பெருகும்

மாங்கல்ய பலம் பெருகும்

பிரதமை திதியில் பூஜை துவங்கும் போது, வீட்டுக்கும் பூஜைக்கும் வரும் பெண்களுக்கு கூந்தலை அலங்கரிக்கத் தேவையான எண்ணெய், மலர்கள், ஹேர் பின், ரிப்பன் முதலான பொருட்கள் மற்றும் புத்தாடையுமாக வழங்க வேண்டும். துவிதியை நாளில் குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை ஆடையுடன் சேர்த்துத் தருவது நல்லது. இதனால் மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம். திருதியை நாளில், கண்ணாடி, மஞ்சள், கண் மை ஆகியவற்றை உடையுடன் சேர்த்து தானமாக வழங்கவேண்டும். இவற்றை வழங்குவதால், காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும்.

திருமண தடை நீங்கும்

திருமண தடை நீங்கும்

சதுர்த்தியில், தம்பதியாக வரச் செய்து பொன்னிற ஆடையும் மஞ்சள், சந்தனமும் தானமாக வழங்குவது வழக்கம். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். ஒற்றுமை பலப்படும். பஞ்சமியில், ஐந்து மங்கலப் பொருட்களையும் ஆடையையும் தானமாக வழங்கலாம். தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் நடைபெறும். சஷ்டி திதியில், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, புடவை, ஜாக்கெட் பிட் ஆகியவற்றுடன் தட்சணையாகவும் வைத்துக் கொடுக்கலாம். விரும்பியபடி நல்ல கணவரை அடையலாம்.

ஐஸ்வர்யம் பெருகும்

ஐஸ்வர்யம் பெருகும்

சப்தமி திதியில், பெண்களுக்கு புத்தாடையுடன் ஏழு மங்கலப் பொருட்களை ஆடையுடன் சேர்த்துக் கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. அஷ்டமி திதியில், எட்டு விதமானப் பொருட்களை புத்தாடையுடன் வழங்கலாம். ரொம்பவே விசேஷம். அந்தக் காலத்தில் யானைக்கு தேங்காய் பழங்கள் கொடுத்து, நமஸ்கரிப்பார்களாம்.

கல்வி சிறக்க தானம்

கல்வி சிறக்க தானம்

நவமி ரொம்ப விசேஷம். தேவ குதிரை பிறந்தநாள் என்கிறது புராணம். ஆதிகாலத்தில், வெள்ளைக் குதிரைக்கு கொள்ளு கொடுப்பார்கள். மாணவர்களுக்கு புத்தகங்கள், பேனா, புத்தாடைகள் வழங்கலாம். சந்ததி சிறக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தசமி நாளில், தேவாரம், திருவாசகம் முதலான பக்தி நூல்களை ஆடையுடன் சேர்த்து வழங்க இறையருள் கிடைப்பது நிச்சயம்!

ராமர் சீதை கொண்டாடிய நவராத்திரி

ராமர் சீதை கொண்டாடிய நவராத்திரி

நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளை பெற்றார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. நாமும் நவராத்திரி நாட்களில் அம்பிகையை வணங்கி அருள் பெருவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, September 21, 2019, 12:36 [IST]
Desktop Bottom Promotion