மகா சிவராத்திரி 2026: நான்கு கால பூஜைகளும்... அவற்றால் கிடைக்கும் பலன்களும்..

Maha Shivratri 2026: மகா சிவராத்திரி என்றாலே சிவபெருமானுக்கு உரிய இரவு என்று பொருள். இப்படிப்பட்ட சிவனுக்கு உரிய சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவ பக்தர்களின் விரதங்களுள் மிகவும் முக்கியமானது மகா சிவராத்திரி ஆகும். இந்த நாளில் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதுவும் இரவு முழுவதும் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

இப்படிப்பட்ட மகா சிவராத்திரி நாளில் தான் சிவபெருமான் பாற்கடலை கடையும் போது வெளிவந்த மிகவும் கொடிய ஆலகால விஷத்தை உண்டு மயங்கி விழுந்தார். அப்போது இரவு முழுவதும் சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் தான் இந்த மகா சிவராத்திரி. சிவன் மயங்கி விழுந்த அந்த பிரளய காலத்தில் உலகம் அழியாமல் இருக்க பார்வதி தேவி சிவனுக்கு நான்கு காலத்திலும் பூஜைகளை செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

Maha Shivratri 2026 Date 4 Kaala Puja Timings And Its Benefits

அந்த வகையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 15 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் இரவு முழுவதும் சிவன் கோவிலில் நான்கு கால பூஜைகள் நடக்கும். இந்த பூஜைகளில் கலந்து கொண்டால், செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் கிடைக்கும். அதோடு வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தடைகளும் நீங்கி, மகிழ்ச்சியும், செழிப்பும் நீடிக்கும் என்று நம்பப்படுகிறது. இப்போது அந்த 4 கால பூஜைகள் மற்றும் அந்த பூஜைகளில் கலந்து கொள்வதால் கிடைக்கும் பலன்களைக் காண்போம்.

முதல் கால பூஜை (மாலை 6.00 மணி முதல் இரவு 9 மணி வரை)

* இது பிரம்ம தேவர் சிவபெருமானை வழிபட்ட நேரம் ஆகும்.
* அபிஷேகம் - பால், பஞ்சகவ்யம்
* பூக்கள் - வில்வம், தாமரை
* நிவேத்தியம் - சர்க்கரைப் பொங்கல், பழங்கள்
* பலன்கள் - இந்த நேரத்தில் சிவனை வழிபடுவதால் கடந்த கால பாவங்கள் நீங்கும்.

இரண்டாம் கால பூஜை (இரவு 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை)

* இது மகாவிஷ்ணு வழிபட்ட நேரம் ஆகும்.
* அபிஷேகம் - இளநீர், பஞ்சாமிர்தம்
* பூக்கள் - துளசி மற்றும் வில்வம்
* நிவேத்தியம் - பருப்பு பாயாசம், கற்கண்டு சாதம்
* பலன்கள் - இந்த கால பூஜையில் கலந்து சிவனை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் மற்றும் ஐஸ்வர்யம் உண்டாகும்.

மூன்றாம் கால பூஜை (நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை)

* இது அம்பாள் வழிபட்ட காலமாகும். இதை லிக்கோத்பவ காலம் என்றும் அழைப்பர்.
* அபிஷேகம் - தேன் மற்றும் பழச்சாறுகள்
* நிவேத்தியம் - எள் சாதம் மற்றும் எள் பலகாரம்
* பூக்கள் - மல்லிகை, தும்பை, தாழம்பூ (மகா சிவராத்திரி நாளில், அதுவும் இந்த ஒரு கால பூஜையில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ சூட்டப்படும்)
* பலன்கள் - இந்த காலத்தில் சிவனை வழிபட்டால் தீய சக்திகள் அகலும், நோய்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

நான்காம் கால பூஜை (அதிகாலை 3.00 மணி முதல் காலை 6.00 மணி வரை)

* இது தேவர்கள் மற்றும் ரிஷிகள் வழிபட்ட நேரம் ஆகும்.
* அபிஷேகம் - கரும்புச்சாறு மற்றும் பன்னீர்
* பூக்கள் - அல்லி, சாமந்தி, நந்தியாவட்டை
* நிவேத்தியம் - ஒரு துளி நெய் சேர்த்த சாதம்
* பலன் - இந்த காலத்தில் சிவனை வழிபாடு செய்வதால் காரிய தடைகள் நீங்கும், முக்தி கிடைக்கும் மற்றும் மன அமைதியும் கிட்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, February 13, 2026, 17:31 [IST]
Desktop Bottom Promotion