Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
கொள்கைய கேட்டாலே தல சுத்துதுனா.... இந்தக் கதைய கேட்டா என்ன செய்வீங்க? Wonder Women #002
பூலான் தேவியின் வாழ்க்கை சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ரஜினி அரசியலுக்கு ஒரு வழியாக வருவேன் என்று சொல்லிவிட்டார்.... சரி உங்கள் கொள்கைகள் என்ன என்றால் தலை சுத்துகிறது என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். அவர் எதை நினைத்து அப்படிச் சொன்னாரோ தெரியாது, ஆனால் நெட்டிசன்களை அதை பிடித்துக் கொண்டு சமூக வலைதளத்தில் வெகுவாக கலாய்த்தார்கள்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் ஒரு பக்கம், இருக்கட்டும்.... இன்றைய இளைஞர்களிடத்தில் அரசியல் பற்றிக் கேட்டால் பொத்தம் பொதுவாக.... இங்க எல்லாமே மோசம் எல்லாருக்கும் பணம் சம்பாதிக்கிறது மட்டும் தான் ஒரு நோக்கமா இருக்கு,மக்கள்கிட்டயிருந்து கொள்ளையடிக்கிறாங்க,கோடி கோடியா சொத்து சேத்துக்குறாங்களே தவிர இந்த மக்களுக்கு எதாவது பண்ணும்னு நினைக்கிறதே இல்ல என்று பட்டியல் வாசிப்பார்கள்.
அப்படி பட்டியல் வாசிப்பவர்கள் இந்தப் பெண்ணின் கதையை படித்திடுங்கள்.

பூலான் தேவி :
எங்கோ கடந்த காலங்களில் கொல்லைக்காரி என்ற பட்டத்துடன் இந்த பெயர் அடிப்பட்டிருக்கும். அவள் பிறக்கும் போதே கொள்ளைக்காரியா? அல்லது அவள் தந்தை மிகப்பெரிய கொள்ளக்கும்பலின் தலைவனாக இருந்து, வழித்தோன்றலாக மகளுக்கும் அதே ஒட்டிக் கொண்டதா?
உண்மையில் அவளது வரலாறு முழுவதுமாக யாரும் தெரிந்து கொண்டிருக்க மாட்டோம். வாழ்க்கையில் அவள் சந்தித்தது அத்தனையும் துரோகங்கள் மட்டும் தான். அவளுக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பிருகிறது என்பதை கட்டுரையின் முடிவில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

பிறப்பு :
பூலான் தேவி உத்திர பிரதேச மாநிலத்திலுல்ள ஜலான் என்ற மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் தேவிதீன் மற்றும் மூலா தம்பதிகளுக்கு மகளாக பிறந்தாள்.
தந்தை ஒரு படகோட்டி. மிகவும் ஏழ்மையான குடும்பம், அத்துடன் இவர்கள் மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். பூலான் தேவியுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஐந்து பேர் நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன்.

முதல் அடி :
அப்போதெல்லாம் அங்கே குழந்தைத்திருமணம் மிகவும் வெளிப்படையாக நடந்து கொண்டிருந்த கால கட்டம் அது. பதினோறு வயதான பூலான் தேவிக்கு அவரை விர இருபது வயத மூத்தவனான புட்டிலாலுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர் பெற்றோர். அவன் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்திருந்தான் மூன்றாவதாகத் தான் பூலான் தேவியை திருமணம் செய்து கொண்டான்.
அன்றைய காலத்தில் பெண்கள் பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்தாலும் பருவமடையும் வரையிலும் அவர்களின் தாய் வீட்டில் இருப்பார்கள் ஆனால் பூலான் தேவியை அவள் கணவன் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அழைத்துச் சென்றான். பாலியல் வன்முறை செய்தான். சிறுமி பூலான் தேவிக்கு அவள் கணவன் மூலமாக பாலியல் வன்கொடுமை நடந்தது.

துன்பங்கள் :
இக்கொடுமையை இனிமேலும் என்னால் பொருத்துக் கொள்ள முடியாது என்று நினைத்த பூலான் தேவி தன்னுடைய அம்மா வீட்டிற்கு தப்பி வந்தாள். அவள் போனாள் என்ன நான் வேறொருவளை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி புட்டிலால் நான்காவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டான்.
வீட்டிற்கு வந்த பூலான் தேவிக்கு இங்கும் நிம்மதி பறிபோனது. காரணம், அவளது மாமா உறவினர் என்ற போர்வையுடன் வீட்டிற்குள் நுழைபவன் பூலான் தேவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தான்.

வெறுத்து ஊரை விட்டே ஓட்டம் :
ஒரு நாள் பெற்றோரின் எதிரிலேயே ஊரில் இருந்த மேல் வகுப்பினர் பூலான் தேவிக்கு பாலியல் தொந்தரவுகளை கொடுத்திருக்கிறார்கள். வாழ்க்கையே வெறுத்துப் போனது. சகோதரிகளுடன் அந்த ஊரை விட்டே ஓடினாள்.
தன்னை பூலான் தேவி பழி வாங்குவதாக நினைத்த மாமன்,அவளை பழி வாங்கிட வேண்டுமென்று போலீசில் பூலான் தேவிக்கு கொள்ளைக்கும்பலுடன் தொடர்பிருக்கிறது என்று பொய்யான புகாரை அளித்தான். பெற்றோர் கைது செய்யப்பட்டார்கள். சில தினங்களில் பூலான் தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாள், அங்கேயும் போலீசார் பூலான் தேவிக்கு பாலியல் தொந்தரவுகளை கொடுத்தார்கள்.

சவால் :
ஏற்கனவே வறுமை தலைவிரித்தாடும் போது, கணவன் என்ற பெயரில், உறவினன் என்ற பெயரில்,போலீஸ் என்ற பெயரில் தங்கள் கைகளில் உருவாக்கிக் கொண்ட அதிகாரங்களை வைத்து தன்னை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தவர்களை எதிர்க்க வேண்டும் என்று சபதம் ஏற்றாள் பூலான் தேவி.
உண்மையில் பூலான் தேவியை இங்கே நாம் பாராட்டியாக வேண்டும். என்னை இவ்வளவு கொடுமைகளை செய்கிறார்கள், என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திகிறார்கள் என்று சொல்லி தன்னை தாழ்த்திக் கொள்ளாமல் என்னை ஒடுக்கியவர்களை எல்லாம் எதிர்ப்பேன் என்று எழுந்து நின்ற பூலான் தேவி நிச்சயம் பாராட்டுக்குரியவள் தான்.

கடத்தல் :
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பூலான் தேவிக்கு விடுதலை கிடைத்தது. இந்நிலையில் பாபு குஜார்சிங் என்ற கொல்லைக்காரன் பூலான் தேவியை கடத்திச் சென்றான். அங்கே குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றை கற்றுக் கொண்டாள். அந்த கொள்ளைக்கூட்டத்தில் இருந்த விக்ரம்மல்லா என்பவன் பூலான் தேவிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான்.
இதுவரை யாரும் அளித்திடாத பாதுகாப்பு உணர்வை கொடுத்தான். சில நாட்களில் கொல்லைக்கூட்டத் தலைவன் பாபு குஜர்சிங் கொல்லப்பட்ட, அந்த கூட்டத்தின் தலைவனாக விக்ரம்மல்லால் பொறுப்பேற்றுக் கொண்டான்.

ஆட்டம் ஆரம்பம் :
கொள்ளைக்கூட்டத் தலைவரான விக்ரம்மல்லால் துணையுடன் தனக்கு தீங்கு இழைத்தவர்கள் ஒவ்வொருவரையும் தேடித் தேடி தீர்த்து கட்டினாள் பூலான் தேவி. 1980ஆம் ஆண்டு கொள்ளை கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையில் விக்ரம்மல்லால் கொல்லப்பட்டான். பூலான் தேவி தாகூர் வகுப்பைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்டாள். அங்கேயும் பாலியல் வன்கொடுமை நடந்தது.

பழிக்குப் பழி :
அங்கேயிருந்த கிராமத்தினரின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்து காட்டிற்கு சென்றாள். அதுவரை யாரும் அளித்திடாத பாதுகாப்பு உணர்வினை அளித்து வந்த தன் காதல் கணவன் விக்ரம்மல்லாவை கொலை செய்தவர்களை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று துடித்தாள் பூலான் தேவி.
அதற்கு உதவி செய்வதற்காக மான்சிங் என்ற கொள்ளைக்கூட்டத்துடன் சேர்ந்து பலத்தை அதிகப்படுத்திக் கொண்டாள்.

கிராமத்தை சூறையாடினாள் :
தன்னுடைய பலத்தை அதிகப்படுத்திக் கொண்டுவிட்டு, தன்னுடைய கணவரை கொலை செய்தவர்களுக்கு பிக்மாய் கிராமவாசிகள் தஞ்சமளித்தார்கள் என்று சொல்லி கிராமத்தை சூறையாடினாள்.
தங்களுக்கும் இதற்கும் எதுவும் சம்மந்தமில்லை என்று எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் கிராம மக்களை நோக்கி சுட ஆரம்பித்தாள். இதில் இருபத்திரெண்டு பேர் உயிரிழந்தார்கள்.

இந்தியா அதிர்ச்சி :
1982ல் நடைப்பெற்ற இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதோடு பூலான் தேவி என்ற பெயர் மிக வேகமாக பரவியது. பெரும் அதிர்ச்சியாக உத்திரபிரதேச முதல் மந்திரியாக இருந்த விபி சிங் தன் பதவியை ராஜினாமா செய்தார். உடனடியாக உத்திரபிரதேச மற்றும் மத்திய பிரதேச போலீசார் உசார் படுத்தப்பட்டனர்.
இரு மாநில போலீசாரும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர் பூலான் தேவி சிக்கவில்லை. பூலான் தேவியை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் இரண்டு லட்ச ரூபாய் வரை கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.அப்போதும் இவர்களால் பூலான் தேவியை நெருங்க முடியவில்லை.

குள்ளமான பெண் :
ஒரு பக்கம் போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் போதே இவள் தன் எதிரிகளை சூறையாடினாள். இதுவரை கொலை, கடத்தல் என 48 வழக்குகள் பூலான் தேவி மீது இருந்தது.
இத்தனை வழக்குகள் இருக்கும் பெண் பார்க்க எப்படியிருந்தாள் தெரியுமா? பூலான் தேவி பிறரை விட சற்று குள்ளமான பெண் தான். ஆனால் அவள் கம்பீரமாக இருந்திருக்கிறாள்.அவளைப் பார்த்தாலே கிராமத்தினர் நடுக்கத்துடன் வணக்கம் வைக்கும் அளவிற்கு அவளின் கம்பீரம் இருந்திருக்கிறது.

தப்பிக்க காரணம் :
பூலான் தேவியை என்ன தான் கொள்ளைக்காரி, கொலை செய்தவள் என்று இந்த சமூகம் அடையாளப்படுத்தினாலும் அவளின் கிராம மக்கள் தொடர்ந்து பூலான் தேவிக்கு ஆதரவு கொடுத்து வந்தார்கள். அதற்கு அடிப்படையாய் அவர்கள் வைக்கும் ஒரே வாக்கு. உயர் சாதியிடமிருந்து பூலான் தேவி எங்களை காக்கும் கேடயமாக இருக்கிறாள் என்பது தான்.
ஆனால் போலீசின் வேட்டை தீவிரமாகிக் கொண்டே போனது.

சரண்டரான பூலான் தேவி :
ஒரு வழியாக பூலான் தேவி மத்திர பிரதேசத்தில் சரணடையப்போவதாக செய்திகள் வெளியாகின. 1983 ஆம் ஆண்டு தன்னுடைய கொள்ளை கும்பலுடன் மத்திய பிரதேசத்திலிருக்கும் ஜக்மோரி கிராமத்தின் காட்டிலிருந்து வெளியே வந்தாள். அங்கிருந்து நயாகாவோன் போலீஸ் நிலையத்திற்கு சென்றார்கள்.
பூலான் தேவியுடன் இன்னும் நான்கு கொள்ளைக்காரர்களும் உடன் சென்றார்கள். அங்கிருந்து பிந்து நகரத்திற்கு கொண்டு வரப்பட்டார்கள்.

பொதுமக்கள் முன்னிலையில் :
மகுவா கிராமத்தில் நடக்கும் யாகத்தைப் பார்க்க வேண்டும் என்று பூலான்தேவி விருப்பம் தெரிவித்தாள்.அதை நிறைவேற்றுவதற்காக அவளை யாகம் நடக்கும் இடத்துக்கு கொண்டு சென்றார்கள்.
அங்கிருந்து பூலான் தேவி பிந்து நகரத்தில் 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி பன்னிரெண்டாம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் சரணடைவாள் என்று அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி அன்று காலை ஒன்பது மணிக்கு முதல் மந்திரி அர்ஜுன் சிங் முன்னிலையில் தன்னுடைய ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தாள் பூலான் தேவி.
இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பிந்து நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். பூலான் தேவியுடன் சேர்ந்து பலரும் போலீசில் சரணடைந்தார்கள் .

அரசியல் :
சிறையில் அடைக்கப்பட்டிருந்த பூலான் தேவி சிறையில் இருந்த படியே அரசியலில் குதித்தார். 1991 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சிறையில் இருந்த படியே டெல்லி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார் ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.
அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு விடுதலையானவர் உமத் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் நுழைந்தார்.

சமூக சேவை :
தொடர்ந்து பூலான் தேவி சமூக சேவையில் அதிக அக்கறை காட்டினார். பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக மக்களுக்கு சேவை செய்து வந்தார். அதன் பின்னர் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து 1996 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.
1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே மிர்சாபூர் தொகுதியில் 2-வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.

சுட்டுக் கொலை :
எம்.பி"யாகி இருந்ததால் பூலான்தேவிக்கு டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள அசோகா ரோட்டில் 44_ம் எண் வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது. பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் காலங்களில் பூலான்தேவி அந்த வீட்டில் தங்கி இருந்து, சபைக்கு சென்று வருவது வழக்கம்.
2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற கூட்டத்திற்கு சென்று வீடு திரும்பிய பூலான் தேவியை அவரது வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். உடலில் ஐந்து குண்டுகல் பாய்ந்த நிலையில் பூலான் தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இறங்கல் :
இந்த சம்பவம் பூலான் தேவியின் கிராம மக்கள் மட்டுமல்லாது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பூலான்தேவி சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பூலான்தேவியின் சொந்த தொகுதியான மிர்சாபூரில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. உத்தரபிரதேச மாநிலத்தில் "முழு அடைப்பு" நடந்தது.
பிரதமர் வாஜ்பாய் சென்று, மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இறுதியாக மிர்சாபூரில் உள்ள சுடு காட்டில் பூலான் தேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.



Click it and Unblock the Notifications











