Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பாலியல் வன்கொடுமையினால் 42 ஆண்டுகள் படுக்கையில் கிடந்த பெண்ணின் சோக கதை!
1973ஆம் ஆண்டு மருத்துவமனையின் வார்டு பாயினால் நர்ஸாக இருந்த அருணா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சுமார் 42 ஆண்டுகள் அதற்கான விளைவுகளையும் சந்தித்தார்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற ஓர் சம்பவம். சமீபத்தில் 2015 ஆம் ஆண்டு தான் முடிவுக்கு வந்தது. ஒரு பெண்ணின் இயல்பு வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த துயர சம்பவம் இனி யாருக்கும் நடந்து விடக்கூடாது.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படியுங்கள்.
அது நவம்பர் மாதம் 27 ஆம் தேதி 1973 ஆம் ஆண்டு. நம்மில் பலரும் பிறந்திருக்கவே மாட்டோம். அருணா மும்பையில் இருக்கும் கிங்க்ஸ் எட்வேர்ட் மெமோரியல் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அன்றைக்கு லேசாக காய்ச்சல் இருப்பது போலத் தோன்றியது. அவரை விட மூன்று வயது இளையவரான மங்களா நாயக் இன்றைக்கு விடுமுறை எடுத்துக் கொள் என்று சொல்கிறார்.

மறுத்து விட்ட அருணா :
எனக்கான வேலைகள் அங்கே நிறைய இருக்கிறது என்று சொல்லி அவரின் ஆலோசனையை ஏற்க மறுத்துவிட்டு மருத்துவமனைக்கு கிளம்புகிறார். மருத்துவமனைக்குச் சென்ற அவர், தன்னுடைய உடல் நலமின்மையை வெளியில் காட்டாது சுறுசுறுப்பாக தன் வேலைகளை பார்க்கத் துவங்கினார்.
அன்று இரவு... வெகு நேரமாகியும் அருணா வீட்டிற்கு திரும்பவில்லை. அவள் நர்ஸ் தானே கிளம்புகிற நேரத்தில் திடீரென்று எதாவது அவசர கேஸ் வந்திருக்கும். அல்லது எதாவது எமர்ஜென்ஸி என்று சொல்லியிருப்பார்கள் இப்படி நடப்பது சகஜம் என்று நினைத்துக் கொண்டார்கள் அருணாவின் வீட்டினர்.
மறுநாள் அருணா பணியாற்றிய மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஒரு போன் கால் வந்தது.

இளமைக்காலம் :
அருணாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். ஆறு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். அருணாவுக்கு பத்து வயதாகும் போதே அப்பா இறந்துவிட குடும்ப பொறுப்பு அண்ணன் பாலகிருஷ்ணா மற்றும் கோவிந்தா மீது விழுந்தது.
அருணாவும் குடும்ப பொறுப்பை உணர்ந்து வெளியூருக்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என்று நர்ஸாக பணியாற்றத்துவங்கினார். தன்னுடைய 17வது வயதில் தன் ஊரை விட்டு வெளியேறிய அவர், மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜூனியர் நர்ஸாக பணியில் சேர்ந்தார்.

அருணாவின் கனவு :
அருணாவுக்கு மருத்துவராக வேண்டும் என்பது தான் விருப்பம். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் நர்ஸ்ஸாக பணியில் சேர்ந்தார்.
லண்டனில் சென்று பணியாற்ற வேண்டும் அங்கே சம்பளம் நிறைய கிடைக்கும். குடும்பத்திற்கு பெரிதும் அது உதவியாக இருக்கும் என்று நினைத்திருந்தார்.
பெண்களை பள்ளிப்படிப்பு கூட தாண்டாத அந்த காலத்திலேயே நர்ஸாக வேலைப்பார்ப்பது, வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் எந்த அளவுக்கு முன்நோக்கி பயணித்திருக்கிறார் என்பது தெரிகிறது.

பணிக்கு முதலிடம் :
நோயாளிகள் முதல் மருத்துவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமானவராகிப் போன அருணாவுக்கு நர்ஸ் வேலை மனதுக்கு நெருக்கமான வேலையாகவும் அமைந்துவிட்டது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லாருக்கும் அருணா என்றால் ப்ரியம் இருந்தது. அருணாவின் அழகிலும், அறிவிலும் மயங்கி தனது மனதை பறிகொடுத்தார் டாக்டர். சந்திப் தேசாய் என்பவர்.
இவரும் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட... அருணாவின் குடும்பத்தினரோ எதிர்ப்பை காட்டினர். அதனால் பதிவுத் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டது இந்த காதல் ஜோடி.
சுமார் மூன்றரை ஆண்டுகள் பயிற்சிக்கு பிறகு ஸ்டாஃப் நர்ஸாக பணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் நர்சிங் ஹாஸ்டலில் தங்கியிருந்தவர் அதன் பிறகு வீடெடுத்து தங்கினார்.

லேப் :
அருணாவுக்கு லேப் இன்சார்ஜ் பொறுப்பு வழங்கப்பட்டது. அங்கே சில மருந்துகளை பரிசோதிக்க நாய்களை கூண்டுகளில் அடைத்து வைத்திருந்தார்கள். அந்த நாய்க்கூண்டு,நாய்கள் மற்றும் அந்த அறையை சுத்தம் செய்ய வேண்டியது சோகன்லால் பார்தா வால்மீகியின் வேலை . அவர் அங்கே ஒப்பந்த துப்புரவு வேலை செய்பவராக இருந்தார்.
சோகன்லால் சரியாக வேலை செய்யாதது அருணாவுக்கு பெரும் இடைஞ்சலைக் கொடுத்தது. நாய் கூண்டினை சரியாக பூட்டாமல் செல்ல, அருணா அந்த அறைக்குச் சென்றாலே நாய்கள் வாலாட்டிக் கொண்டு அருணாவை சூழ்ந்து கொள்ளும்.

வேலையில் திருட்டு :
சோகன் லாலின் தந்தை அதே மருத்துவமனையில் மேற்பார்வையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய சிபார்ஸினால் சோகன்லாலுக்கு தற்காலிக பணியாளராக சேர்க்கப்பட்டிருந்தார்.
அருணா பணியாற்றி வந்த'நாய்கள் அறுவை மற்றும் ஆராய்ச்சிப் பிரிவி'ல். சில நாட்களாக அடிக்கடி நாய்களுக்கான இறைச்சி காணாமல் போய் வந்தது.
அருணாவின் சந்தேகம் அந்தப் பிரிவில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிய சோகன்லால் பாரத வால்மீகி மீதுதான். அவனிடம் விசாரித்தார்.
தோழிகளிடம் புலம்ப அவர்களோ வேறு டிப்பார்ட்மெண்ட் மாற்றிக் கொள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அருணாவோ, இது எனக்காக ஒதுக்கப்பட்ட வேலை நான் எப்படி இதனை செய்ய மாட்டேன் என்று மறுப்பது, என் வேலையை நான் செய்து முடிக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்.

மெமோ :
சரியாக வேலை செய்யவில்லை என்று நிர்வாகத்திற்கு இரண்டு முறை சோகன் லால் மீது அருணா புகார் கூறியிருந்தார். நவம்பர் 25 ஆம் தேதியன்று நீ இன்னமும் சரியாக பணியாற்றவில்லை மூன்றாவது முறையாக உன் மீது புகார் அளிக்கப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார் அருணா.
மூன்று முறை புகார் அளிக்கப்பட்டால் மெமோ அளித்து விடுவார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.

சோகன் லால் கொடூரம் :
இதனால் ஆத்திரமடைந்த சோகன் லால் அருணாவை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று துடித்திருக்கிறார். நவம்பர் 27 ஆம் தேதி பணி முடித்து விட்டு இரவு கிளம்பும் போது தன்னுடைய உடையை மாற்றிக் கொள்ள மருத்துவமனையின் கீழ் தளத்தில் உள்ள ஓர் அறைக்குள் சென்றிருக்கிறார் அருணா.
பின்னாடியே தொடர்ந்து சென்ற சோகன் லால், அவரை பாலியல் ரீதியாக தாக்க முயற்சி செய்தான். அருணா கத்தி விடக்கூடாது என்பதற்காக தன் கைவசம் வைத்திருந்த நாய்க்கட்டும் சங்கிலியால் அருணாவின் கழுத்தை இறுக்கியிருக்கிறான்.
பலவந்தமாக தாக்கிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறான். சம்பவம் நடந்த அன்ற அருணாவுக்கு மாதவிடாய் இருந்ததால் ஆசன வாய் வழியாக பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான்.
பின்னர் அவர் மயக்கமடைந்ததும் அவரிடமிருந்த பொருட்களை திருடிக்கொண்டு ஓடிவிட்டான்.

அருணா :
மறுநாள் காலை 7 மணிக்கு வேலைக்கு வந்த செக்யூரிட்டி தான் முதலில் அருணாவை பார்த்திருக்கிறார். அதுவும் ஒட்டுத்துணி கூட இல்லாமல்... உடல் முழுவதும் ரத்தச் சகதியில் மிதந்து கொண்டிருக்க உதடு, மார்பு, வயிறு என பல இடங்களில் நகக்கீறலும், பற்களின் தடங்களுமாய் அருணா கிடந்த கோலம் ஒருகணம் அவரை உலுக்கியிருக்கிறது.
அருணா இறந்து விட்டார் என்றெண்ணிய அந்த செக்யூரிட்டி, மேலதிகாரிகளுக்கு தகவல் தர... அவர்கள் வந்து பார்க்க... உயிர் இருப்பதைப் பார்த்ததும், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.கழுத்து நெறிபட்டதில் அவரது மூளைக்கு இரத்தம், ஆக்ஸிஜன் செல்வது தடைப்பட்டதால், அவரது மூளை பாதிக்கப்பட்டது.
கிட்ட தட்ட பதினைந்து மணி நேரம் சுயநினைவின்றி.... ஏகப்பட்ட ரத்தப் போக்கும் சேர்ந்து ஏற்பட்டதன் விளைவு...நினைவிழந்து கோமா நிலைக்குப் போனார் அருணா.

நழுவிய குடும்பம் :
நிர்வாகம் இதனை வெளியில் கசிந்து விடாமல் பார்த்துக் கொண்டது. ஆனால் அருணா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியில் கசியத் துவங்கியது.
தங்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு வேண்டி மருத்துவமனை செவிலியர்கள் நடத்திய மூன்று நாள் வேலை நிறுத்தத்தால் பரபரப்பு அடைந்தது.
அருணா தாக்குதலுக்காக 1973ம் வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற் வேலை நிறுத்தம்தான் இந்தியாவின் செவிலியர்கள் நடத்திய முதல் வேலை நிறுத்தம்.
அருணா பலாத்காரத்திற்கு பலியாகிப் போனார் என்று தெரிந்தவுடன் அவரின் குடும்பம் கையை விரித்தது. அவரை தங்களின் மகளே இல்லையென தலை மூழ்கியது. குடும்பமே தலை மூழ்கிய பின் மருத்துவ நிர்வாகமும் காவல்துறையில் இக்கொடுஞ்செயலை வழக்காக பதிவு செய்ய வில்லை.

பத்திரிக்கை செய்திகள் :
நழுவிய குடும்பம், செவிலியர்களின் போராட்டம் என விஷயம் சூடுபிடிக்க தொடர்ந்து பத்திரிக்கைகளில் இது குறித்த செய்தி வெளியாகத் துவங்கியது.
பத்திரிக்கைகளின் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு அப்பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளராக இருந்த லக்ஷ்மண் நாயக் என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினார்.
இவர் விசாரணையில் ஆர்வம் காட்டுவது கண்டு, இவருக்கு தேவையான உதவிகளை செய்ய முன் வந்தார் பிங்கி விரானி என்ற பத்திரிக்கையாளர்.

சோகன் லால் கைது :
இவ்விருவரின் கூட்டு முயற்சியால் ‘சோகன் லால் பார்த வால்மீகி' கைது செய்யப் பட்டான். இவன் உண்மையை ஒப்புக்கொள்ள, குற்றவாளி என்பது நிரூபணமானது.
ஆனால் பாலியல் வன்கொடுமை என்றில்லாமல் தாக்குதல் மற்றும் திருட்டு ஆகிய குற்றங்களுக்காக ஏழு ஆண்டுகள் தண்டிக்கப்பட்டான். தண்டனைக்குப் பிறகு 1980 ஆம் ஆண்டு விடுதலையும் செய்யப்பட்டான். அதன் பிறகு சுதந்திரமாக நடமாடத்துவங்கிவிட்டான்.

சோகன் லால் தண்டிக்கப்படாததற்கு :
பாலியல் வன்கொமை செய்தவனுக்கு வேறு பிரிவில் தண்டனை வழங்கப்பட்டதற்கு சில காரணங்கள் முன் வைக்கப்பட்டது
பாதிக்கப்பட்ட அருணாவோ எந்தவித உணர்வும் செயல் திறனும் இன்றி நீதிமன்றம் செல்லவோ அல்லது சாட்சி எதுவும் சொல்வதற்கான நிலையிலோ இல்லை. நேரடி சாட்சியங்களும் எதுவும் இல்லை. தனது ‘அருணாவின் கதை' புத்தகத்தில் பத்திரிக்கையாளர் பிங்கி விரானி இப்படி எழுதியிருக்கிறார்.
யோனி மூலம் பலாத்காரம் செய்யப்பட்டால்தான் அது கற்பழிப்பில் சேரும் சோகன் லால் செய்தது ஆசனவாய் வழியே என்பதால் அவன் மீது கற்பழிப்புக் குற்றம் சுமத்தப்படவில்லை என்பது இந்த வழக்கில் மிக மோசமான விஷயம்.

கொலை முயற்சி :
சில காலம் கழித்து நினைவுத் திரும்பிய அருணாவுக்கு பார்வை தெரியாது, பேச முடியாது, கை கால்கள் செயலிழந்து விட்டது. அவரது கருவிழி மட்டுமே அசையும்.
அவ்வப்போது அலறல்களாகவும், சிரிப்பாகவும் தான் நினைப்பதை வெளிப்படுத்துவார். அவரை அதே மருத்துவமனையில் இருக்கும் செவிலியர்களே பராமரிக்கத் துவங்கினர்.
1980 இல் சோகன் லால் சிறையிலிருந்து வெளியில் வந்து கோமாவில் இருந்த அருணாவைக் கொல்ல முயன்றான். மும்பை மாநகராட்சி அருணாவை இரண்டுமுறை கேஇஎம் மருத்துவமனையிலிருந்து படுக்கை தேவைப்படுகிறது என்று சொல்லி வெளியேற்றப் பார்த்தது. ஆனால் இம்முயற்சிகள் யாவும் இந்த மருத்துவமனை செவிலியர்களால் முறியடிக்கப்பட்டன.

கருணைக்கொலை :
ஒன்றல்ல இரண்டல்ல முப்பது ஆண்டுகளை மருத்துவமனை படுக்கையிலேயே கழித்தார் அருணா. ஒரு கட்டத்தில் அருணாவை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால அவரை பராமரித்து வந்த மருத்துவமனை செவிலியர்கள் இதனை எதிர்த்தனர். அவர்கள் அருணா மீது காட்டிய அன்பு அருணாவுக்கு புரிந்ததோ அல்லது அவர் அதனை உணர்ந்தாரோ இல்லையோ இந்த உலகம் நன்றாகவே உணர்ந்து கொண்டது.
அவரை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று பிங்கி விரானி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை எதிர்த்து, அவருக்கு வாழ்வதற்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன என்று போராடினர். மாநகராட்சி அந்த படுக்கையைக் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது அதை எதிர்த்து வாபஸ் வாங்கும்படியும் செய்தார்கள்.

42 ஆண்டுகள் :
நிரந்தரமாக சுயநினைவற்று கிட்டத்தட்ட42 ஆண்டுகள் படுக்கையில் கிடந்திருந்தார் அருணா. காதலித்த மருத்துவர் நான்கு ஆண்டுகள் வரை காத்திருந்து வேறு திருமணம் செய்து கொண்டு விட்டார்.
அருணாவை இக்கொடுமைக்கு ஆளாக்கிய சோகன் லால் தண்டனைக்காலம் முடிந்து தன் குடும்பத்தினருடன் தற்போது நிமத்தியாக வாழ்கிறான்.
ஆனால் பாதிக்கப்பட்ட அருணா? தன்னுடைய இருபத்தைந்து வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு,பல்வேறு இன்னல்களை சந்தித்து சுமார் 42 ஆண்டுகள் படுக்கையில் கிடந்த அருணாவுக்கு என்ன பதில் சொல்வது. அவரது கனவு, காதல் வாழ்க்கை, அவருடைய இளமை எல்லாமே செத்து விட்டது.

அருணா மரணம் :
கடந்த 2015 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி தன்னுடைய 66வது வயதில் தான் என்ன தவறு செய்தோம் என்று தெரியாமலேயே இறந்தும் போனார் அருணா.
குற்றம் செய்தவர் சுதந்திரமாக நடமாட நம் வசதிக்கேற்ப சட்டங்களை மாற்றிக்கொண்டு வாழலாம். நவம்பர் 27 சரியாக இன்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் அருணாவின் வாழ்க்கையையே உருக்குலைத்த சம்பவம் நடந்திருக்கிறது. இன்றைக்கு நீங்கள் நினைவு கூறும் இந்த சம்பவம் உங்களை பார்த்து கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்.
அருணாவுக்கு பதில் சொல்லப் போகிறீர்களா? அல்லது இதையும் மறந்து... கடந்து செல்லப் போகிறீர்களா?



Click it and Unblock the Notifications











