இட்லி, தோசை மாவு சீக்கிரம் புளிச்சுப் போகுதா? இதோ மாவு புளிக்காமல் இருக்க சில டிப்ஸ்...

Idli Dosai Maavu Pulikamal Iruka: பெரும்பாலானோரின் வீட்டில் இட்லி, தோசை மாவு எப்போதும் ஸ்டாக் இருக்கும். ஆனால் கோடைக்காலம் வந்துவிட்டாலே, இட்லி தோசை மாவை பதப்படுத்துவது என்பது சவாலானதாக இருக்கும். அதுவும் வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லாவிட்டால், இட்லி மாவு அரைத்த ஒரு நாளிலேயே வாயில் வைக்க முடியாத அளவில் புளித்துவிடும்.

பொதுவாக இட்லி தோசைக்கு அரைக்கும் மாவானது அதிகபட்சமாக 3 நாட்கள் வரை புளிக்காமல் பிரஷ்ஷாக இருக்கும். ஆனால் சிலரது வீடுகளில் இட்லி, தோசை மாவு ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் இருக்கும். அது எப்படி என்று பலரும் யோசிப்பதுண்டு.

Idli Dosai Maavu Pulikamal Iruka Tips To Avoid Sourness In Idli Dosa Batter In Tamil

அதற்கு ஒருசில பக்குவம் உள்ளது. அந்த பக்குவத்தில் இட்லி தோசை மாவை அரைத்தால், மாவு ஒரு வாரம் வரை சிறப்பாக இருக்கும். இப்போது இட்லி தோசை மாவு புளிக்காமல் எப்படி நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்திருப்பது என்பதைக் காண்போம்.

* மாவு வேகமாக புளிக்கக்கூடாதெனில், முதலில் இட்லி தோசைக்கு அரிசியை ஊற வைக்கும் போது, அரிசியை நீண்ட நேரம் நீரில் ஊற வைக்கக்கூடாது. ஒரு 3-4 மணிநேரம் அரிசி ஊறினால் போதுமானது. அதிகமாக அரிசி ஊறினால், மாவு வேகமாக புளிக்க வாய்ப்புள்ளது.

* உளுத்தம் பருப்பு சீக்கிரம் ஊறி விடும். எனவே உளுத்தம் பருப்பை ஒரு மணிநேரம் நீரில் ஊற வைத்தால் போதும்.

* மாவை அரைக்கும் முன் சிலர் கிரைண்டரை கழுவாமல் நேரடியாக அரைக்க தொடங்குவார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது. ஏனெனில் நீங்கள் கடைசியாக அரைத்த மாவின் புளிப்புத்தன்மை அந்த கல்லில் இருக்கும் எனவே நன்கு நீரில் கழுவிய பின்னரே மாவை அரைக்க வேண்டும்.

* இட்லி தோசைக்கு மாவை அரைக்கும் போது நீண்ட நேரம் அரைக்கக்கூடாது. பெரும்பாலானோர் மாவு அரைக்கும்போது, சமையலறையில் மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டே செய்வதுண்டு. சில சமயங்களில் கிரைண்டரில் மாவானது பல மணிநேரம் ஓடும். இப்படி நீண்ட நேரம் மாவு ஓடினால், கிரைண்டர் சூடாகி, அந்த சூட்டிலேயே மாவு சீக்கிரம் புளிக்கும் வாய்ப்புள்ளது. எனவே மாவு அரைக்கும் போது நேரத்தை கவனித்து சீக்கிரம் அரைக்க வேண்டும்.

* உளுந்து அரைக்கும் போது அவ்வப்போது நீரைத் தெளித்துவிட்டால், 20-25 நிமிடத்தில் உளுந்து நன்கு பொங்கி வரும், அப்போது மாவை அள்ள வேண்டும். அதேப் போல் அரிசியையும் சரியாக நேரத்தைக் கணக்கிட்டு அரைத்து எடுத்துவிட வேண்டும்.

* சிலர் உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக அரைப்பார்கள். ஆனால் இட்லி தோசை மாவு நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமானால், உளுந்து மற்றும் அரிசியை தனித்தனியாகவே அரைக்க வேண்டும். ஒன்றாக அரைக்கக்கூடாது.

* முக்கியமாக மாவு ஆட்டும் போது, உளுந்து மற்றும் அரிசியை தள்ளிவிட கைகளைப் பயன்படுத்தாமல், பிளாஸ்டிக் அல்லது மரக் கரண்டியைப் பயன்படுத்தலாம். ஏனெனில் கையால் தள்ளினால், உடல் சூட்டினால், மாவு சீக்கிரம் புளிக்க வாய்ப்புள்ளது.

* மாவு அரைத்த பின் இறுதியில் உப்பைப் போட்டு கலந்து வைப்போம். ஆனால் மாவு நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்க வேண்டுமெனில், உப்பு சேர்த்து கலக்காமல் அப்படியே மூடி வைத்துவிடுங்கள். மாவு அரைத்த பின் 3 மணிநேரம் வெளியே இருந்தால் போதும். அதன் பின் ஃபிரிட்ஜில் எடுத்து வைத்துவிடலாம்.

* தேவையான போது மாவை எடுக்கும் போது, கைகளைப் பயன்படுத்தாமல் கரண்டியைப் பயன்படுத்தி தேவையான அளவு மாவை மட்டும் எடுத்து, அதில் உப்பு சேர்த்து பயன்படுத்துங்கள். மாவில் கை படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கை பட்டால் சீக்கிரம் புளித்துவிடும்.

* அக்காலத்தில் ஃப்ரிட்ஜ் இல்லாத போது, மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் அரைத்த மாவு பாத்திரத்தை வைப்பார்கள். இப்படி செய்வதால் மாவு சீக்கிரம் புளிக்காது.

* வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இன்னும் ஒரு அட்டகாசமான டிப்ஸ் என்றால், மாவை அரைத்த பின், அதை வாழை இலை கொண்டு மூடி வைத்தால், 2 நாட்களுக்கு மாவு புளிக்காமல் பிரஷ்ஷாக இருக்கும்.

Story first published: Wednesday, April 26, 2023, 15:35 [IST]
Desktop Bottom Promotion