எது சரி? எது தவறு?

By Maha

ஜப்பானின் ஒரு பகுதியில் பங்கேய் என்னும் குரு ஒரு மடத்தில் வாழ்ந்து வந்தார். அவர் சில வாரங்களுக்கு தியானம் செய்வதற்கான வகுப்புகளை நடத்தினார். அதனால் ஜப்பானின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொள்ள அந்த மடத்திற்கு வந்து தங்கினர். அப்போது அந்த மடத்தில் இருக்கும் சில பொருட்கள் திருட்டு போயின. ஒரு சமயம் மாணவர்கள் அனைவரும் தியானம் செய்ய கூடும் போது, பொருட்களை திருடிய மாணவன் பிடிபட்டான்.

பின் அவர்கள் பங்கேய்க்கு இந்த விஷயத்தை தெரிவித்து அந்த திருடனை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் பங்கேய் அதனை புறக்கணித்தார். மறுநாளும் அந்த திருடிய மாணவன், பொருட்களை திருடும் போது பிடிபட்டான். ஆனால் அப்போதும் பங்கேய் இந்த விஷயத்தை புறக்கணித்தார். இதனால் கோபம் கொண்ட மாணவர்கள் குருவிடம் "அந்த திருடனை வெளியேற்றவில்லை என்றால் அவனை தாங்களே கொல்வதாக கூறி" மனுவை குருவிடம் கொடுத்தனர்.

அந்த மனுவைப் படித்த பங்கேய் அவர்கள் அனைவரையும் அழைத்து "நீங்கள் எல்லோரும் புத்திசாலிகள், உங்களுக்கு எது சரி? எது தவறு? என்று நன்கு தெரியும். அதனால் நீங்கள் விரும்பினால் படிக்க வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் இந்த ஏழை மாணவனை மட்டும் என்னால் அனுப்ப முடியாது. ஏனெனில் அவனுக்கு எது தவறு? எது சரி? என்று தெரியாது. ஆகவே நானும் அவனை கை விட்டால், அவன் எங்கு போவான். ஆகையால், நீங்கள் அனைவரும் என்னை விட்டு பிரிந்தாலும், நான் அவனை என்னுடனே வைத்து கொள்வேன்" என்று கூறினார்.

இதை கேட்ட அந்த திருடிய மாணவனின் கண்கள் கலங்கின. அப்போதிருந்து திருடுவது தவறு என உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டான்.

Story first published: Friday, August 3, 2012, 14:16 [IST]
Desktop Bottom Promotion