உகாதி பண்டிகைக்கான பூஜை அறை அலங்காரம்

By Mayura Akilan

Pooja Room Decor Tips For Ugadi
ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் வெள்ளிக்கிழமை உகாதி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகளை மாவிலைத் தோரணங்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகளும், விருந்துகளும் செய்வது வழக்கம். உகாதி பண்டிகை அன்று பூஜை அறையை அலங்கரிக்க நாம் வழங்கும் சில ஆலோசனைகள்.

மாவிலை தோரணங்கள்

இந்திய பண்டிகைகளில் மார்ச் மாதத்தில் வருவது உகாதி புத்தாண்டு. இந்த மாதத்தில் மா மரங்கள் பூத்து, காய்த்து அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும். எனவே மாவிலைத் தோரணங்களால் வீடு வயில்களையும், பூஜை அறையை அலங்கரிப்பது சிறப்பாக இருக்கும். மா முருகக்கடவுளுக்கு உகந்த கனியாகும். எனவே மாவிலைத் தோரணம் கட்டுவது முருகப் பெருமானை வரவேற்பது போன்றதாகும்.

கலச கும்பம்

எந்த ஒரு பண்டிகை என்றாலும் பூஜை அறையில் கலசம் வைத்து வழிபடுவது வழக்கம். புத்தாண்டுக்கு ஒரு கும்பத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் தேங்காய், வைத்து சுற்றிலும் மாவிலையால் அலங்கரிக்க வேண்டும். கும்பத்தின் நடுவில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து பூஜை அறையில் வைப்பது தெய்வீக அருள் கிடைக்கும்.

வர்ண கோலங்கள்

கோலம் என்பது தெய்வீக அருளை தரக்கூடியது. உகாதி பண்டிகை அன்று ஸ்பெசலாக வர்ணக் கோலமிடுவது சிறப்பு. பச்சரிசி மாவில் கோலமிட்டு வர்ண பூக்களால் அலங்கரிக்கலாம். அதன் நடுவில் கலசத்தை வைப்பது கூடுதல் அழகு தரும். பூஜை அறையின் நான்கு மூலைகளிலும் இதுபோல வர்ண கோலமிடலாம்.

நறுமண பூக்கள்

புது வருட தினத்தில் பூஜை அறையில் உள்ள படங்களுக்கு நறுமணம் மிக்க பூக்களால் அலங்கரிக்க வேண்டும். மல்லிகை, செவ்வந்தி மலர்களாலும், துளசி இலை கொண்டும் அலங்கரிக்கலாம். சந்தனம், பன்னீர் தெளிப்பதன் மூலம் பூஜை அறையில் நறுமணம் வீசும்.

இது போன்ற அலங்காரங்களை பூஜை அறையில் செய்வதன் மூலம் இல்லமே இறைத்தன்மை நிறைந்ததாக திகழும்.

Story first published: Thursday, March 22, 2012, 12:00 [IST]
Desktop Bottom Promotion