பாதாம் பருப்பு சாப்பிடுங்க! ஞாபக சக்தி அதிகரிக்கும்

By Mayura Akilan

Almonds
நினைவாற்றல் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது. ஞாபக மறதி ஏற்பட்டால் பல விசயங்களில் பின்தங்கிவிட நேரிடும். அதுவும் பள்ளி மாணவர்களுக்கு பரிட்சை நேரத்தில் அவர்களின் நினைவாற்றல் திறன்தான் கை கொடுக்கும். ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் மறந்து போனாலே டென்சன் ஆகிவிடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. எனவே சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

மூளைச் சோர்வை தடுக்கும்

அன்றாடம் வீட்டு சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.

ஊறவைத்த பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

அக்ரூட், திராட்சை

அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மூளைக்கு சுறு சுறுப்பு

நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.

நடத்தை மாற்றம்

பெரும்பாலான மாணவர்கள் தேர்வு பயத்தால் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு நடத்தை மாற்றம் மற்றும் மனச்சிக்கல் உண்டாகிறது. கவலை ஏற்பட்டு எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் சத்தான உணவையும் மாணவர்கள் தவிர்க்கின்றனர். இதனால் இரத்த ஓட்டக் குறைவும் மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காமல் போகிறது. எனவே மாணவர்களின் மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதோடு தேர்வு காலம் முழுவதும் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்து கவனித்தால் அவர்களின் நினைவாற்றல் நன்றாக இருக்கும். இதனை வீட்டில் உள்ள பெரியவர்களும் பின்பற்றலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, March 8, 2012, 17:08 [IST]
Desktop Bottom Promotion