சளி பிடிச்சு பாடாய் படுத்துதா? அப்ப இந்த பழங்களை அதிகமாக சாப்பிடுங்க...

Fruits For Cold In Tamil: குளிர்காலம் என்பதால் நிறைய பேர் சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுவார்கள். உங்கள் வீட்டில் உள்ளோரும் அப்படி தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்களா? அப்படியானால் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் கொடுங்கள். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பழங்கள் பெரிதும் உதவி புரிகின்றன.

ஆனால் நிறைய பேர் சளி பிடித்திருக்கும் போது பழங்களை சாப்பிட மறுப்பார்கள். ஏனெனில் பழங்கள் சாப்பிட்டால் சளி இன்னும் அதிகமாகும் என்ற தவறான கருத்து மக்களிடையே உள்ளது. உண்மையில் பழங்களில் ஏராளமான அளவில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் பல்வேறு சத்துக்கள் உள்ளன.

Top 5 Fruits That Help Ease Cough And Cold Symptoms And Boost Immunity

அதுவும் குறிப்பிட்ட பழங்களை சளி பிடித்திருக்கும் போது சாப்பிட்டால், சளி இருமல் தொல்லையில் இருந்து விடுபடுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலுபெறும். இப்போது சளி பிடித்திருக்கும் போது எந்த பழங்களை சாப்பிடலாம் என்பது குறித்து காண்போம்.

1. மாதுளை

மாதுளம் பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த பழத்தை சளி பிடித்திருக்கும் போது உட்கொள்ளும் போது தொண்டை வலி நீங்குவதோடு, சளி பிடித்திருக்கும் போது உடலுக்கு ஒருவித ஆதரவைத் தரும். மேலும் இந்த பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை தொற்றுகிருமிகளால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்க்க உதவுகிறது. எனவே சளி பிடித்திருந்தால், அப்போது விரைவில் குணமாக மாதுளம் பழத்தையோ அல்லது அதன் ஜூஸையோ குடித்து வாருங்கள்.

2. கிவி

கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், சுவாச நோய்த்தொற்றுகளை எதிர்க்கவும் உதவுகிறது. எனவே சளி தொல்லையால் சிரமப்பட்டு வந்தால், அதிலிருந்து விரைவில் விடுபட கிவி பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

3. சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றில் ஏராளமான அளவில் வைட்டமின் சி உள்ளன. இந்த வைட்டமின் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட தேவையான முக்கியமான சத்தாகும். மேலும் இந்த வகை பழங்களை உட்கொள்வதன் மூலம், வைரஸ் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கும் இரத்த வெள்ளையணுக்களின் உருவாக்கம் அதிகரிக்கிறது. மேலும் இந்த பழங்கள் உடலை நீரேற்றத்துடனும், தொண்டை வலியை சரிசெய்யவும் உதவுகிறது. அதற்கு சிட்ரஸ் பழங்களை சாறு வடிவில் எடுப்பதை விட, முழுமையாக அப்படியே சாப்பிடுவது தான் சிறந்தது.

4. அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்னும் நொதி பொருள் உள்ளன. இது சுவாசப்பாதையில் தேங்கியுள்ள சளியை கரைத்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்தும் உள்ளதால், இந்த பழத்தை உட்கொள்ளும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும். அதோடு தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். எனவே இதுவரை சளி பிடித்திருக்கும் போது அன்னாசியை தவிர்த்து வந்தால், இனிமேல் தாராளமாக சாப்பிட்டு நன்மை பெறுங்கள்.

5. பெர்ரி பழங்கள்

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை மற்றும் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் பெர்ரி பழங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ளன. இதனால் இந்த பழத்தை உட்கொள்ளும் போது, உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, November 25, 2025, 14:15 [IST]
Desktop Bottom Promotion