வெயிலால் உடல் வறண்டு போகாமல் இருக்க சர்க்கரை நோயாளிகள் எந்த பானங்களை பருக வேண்டும்?

Summer Health Tips In Tamil: தற்போது அக்னி வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் வெயில் உக்கிரமாக உள்ளது. இதனால் வெளியே சென்றால், உடலில் உள்ள நீர் அனைத்தையும் சூரியன் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிவிடுகிறது. இதன் விளைவாக நீரிழப்பின் அபாயம் அதிகரிக்கிறது.

நீரிழப்பு என்பது ஒரு மோசமான ஆரோக்கிய பிரச்சனை. முடிந்தவரை ஒருவர் தனக்கு நீரிழப்பு ஏற்படாதவறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்தால், அதை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

Summer Health Tips: Best Drinks For Diabetes To Prevent Dehydration In Tamil

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணும் உணவு, குடிக்கும் பானம் என்று உட்கொள்ளும் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரித்துவிடும். குறிப்பாக ஜூஸ்கள் விஷயத்தில் சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சொல்லப்போனால் ஜூஸ்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. ஏனெனில் இவற்றில் போதுமான நார்ச்சத்து இருக்காது மற்றும் சர்க்கரை எளிய வடிவில் இருப்பதால், இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரித்துவிடும். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கோடையில் உடல் வறண்டு போகாமல் இருக்க ஒருசில பானங்களைக் குடிக்கலாம். இப்போது அந்த பானங்கள் என்னவென்பதைக் காண்போம்.

எலுமிச்சை ஜூஸ்

கோடையில் அதிகம் தாகம் எடுக்கும். அப்போது சாதாரண நீரை விட எலுதிச்சை ஜூஸை பலரும் குடிக்க விரும்புவோம். இந்த எலுமிச்சை ஜூஸை சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா என்றால் நிச்சயம் குடிக்கலாம். எலுமிச்சை ஜூஸ் சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

சொல்லப்போனால் அந்த ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் குறைவு. மேலும் எலுமிச்சை ஜூஸ் புத்துணர்ச்சியுடனும், நீரேற்றத்துடனும் ஒருவரை வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் உடல் வறட்சியைத் தடுக்க எலுமிச்சை ஜூஸைக் குடிக்கலாம்.

இளநீர்

இரத்த சர்க்கரை அளவு தான் ஒருவர் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முக்கிய காரணம். இரத்த சர்க்கரை அளவு எப்போதும் குறைவாக இருக்கக்கூடாது. அதேப் போல் அளவுக்கு அதிகமாகவும் இருக்கக்கூடாது, சமநிலையில் இருக்க வேண்டும். எனவே இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும் வழிகளை அறிந்து பின்பற்ற வேண்டும்.

ஒருவருக்கு உடனடி புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு அற்புதமான பானம் தான் இளநீர். இந்த இளநீர் சுவையானது மட்டுமின்றி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அடங்கிய ஆரோக்கியமான பானமும் கூட. ஆய்வு ஒன்றில் கூட இளநீர் சர்க்கரை நோயை பராமரிக்க உதவுவது தெரிய வந்துள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் இளநீரைக் குடிக்கலாம்.

காய்கறி ஜூஸ்

காய்கறி ஜூஸ்களை சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் காய்கறிகளும் உடலுக்கு ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் அளிக்கின்றன. காய்கறி ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கும் ஏற்றது. மேலும் இந்த வகை ஜூஸ் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. அதற்கு ஸ்டார்ச் இல்லாத செலரி, கேல், ப்ராக்கோலி, வெள்ளரிக்காய் போன்றவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடிக்கலாம்.

ஸ்மூத்தி

ஸ்மூத்திகள் சர்க்கரை நோயாளிகளுக்கான அற்புதமான பானம். ஏனெனில் இவற்றில் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து நார்ச்சத்து முழுமையாக பெறப்படுகிறது. இருப்பினும் இதற்கு பயன்படுத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை அவகேடோ, வைட்டமின் சி பழங்கள் அல்லது சியா விதைகளைக் கொண்டு ஸ்மூத்தி தயாரித்துக் குடியுங்கள். அதுவும் காலை வேளையில் ஸ்மூத்தியைக் குடிப்பது மிகவும் நல்லது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, May 15, 2023, 12:45 [IST]
Desktop Bottom Promotion