Dengue: சென்னையில் டெங்குவால் மாணவி மரணம்.. இந்த அறிகுறி தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க..

Dengue: பருவகாலங்கள் மாறும் போது பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுவது வழக்கம். அப்படி மழைக்காலம் அல்லது குளிர்காலத்தின் போது அல்லது அதற்கு பின்னரும் பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்று தான் டெங்கு. இந்த டெங்கு கொசுக்களின் மூலம் பரவக்கூடியது.

இந்த டெங்கு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது மிதமான காய்ச்சலுடன் தொடங்கி பின் தீவிரமாகி, முறையான சிகிச்சையைப் பெறாத போது உயிரிழப்பையே ஏற்படுத்திவிடும். அந்த வகையில் சென்னையில் சமீபத்தில் 19 வயதுடைய ஒரு கேரள மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

Kerala Student Dies Of Dengue In Chennai Warning Symptoms of Dengue Virus Infection

பாலகாட்டை சேர்ந்த 19 வயதுடைய சரண்யா என்னும் மாணவி சென்னையின் தாம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். சமீபத்தில் சரண்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சில நாட்கள் மருந்துகளை எடுத்து வந்துள்ளார். அந்த கல்லூரி வளாகத்தில் உள்ள சோதனை கூடத்தில் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சரண்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது நிலைமை மோசமடைந்தது. பின் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். 19 வயது மாணவி டெங்குவால் இறந்ததால், அந்த கல்லூரி ஹாஸ்டலில் உள்ள மாணவர்களுக்கும் இரத்த பரிசோதனை செய்தனர். அதில் 7 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மற்றும் மூன்று பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இப்படியொரு சம்பவம் சென்னையில் ஏற்பட்டுள்ளதால், சென்னைவாசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக டெங்குவின் அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொண்டு, அந்த அறிகுறிகள் தெரிந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். கீழே டெங்கு வைரஸ் தொற்றின் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. அதிக காய்ச்சல்

டெங்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் தெரியக்கூடிய முதன்மையான அறிகுறி காய்ச்சல் தான். அதுவும் உடலின் வெப்பநிலையானது 104 டிகிரி F அல்லது அதற்கும் அதிகமாகவே இருக்கும். இப்படி காய்ச்சல் உயர் நிலையிலேயே இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

2. கடுமையான தலைவலி

டெங்குவின் மற்றொரு முக்கியமான அறிகுறி அதிகப்படியான காய்ச்சலைத் தொடர்ந்து கடுமையான தலைவலியை சந்திக்க நேரிடும். அதுவும் இந்த வலி தொடர்ந்து நீடித்திருப்பதோடு, போகபோக வலி இன்னும் அதிகரிக்கும்.

3. கண்களுக்கு பின் வலி

அடுத்ததாக டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தால் சந்திக்கும் மற்றொரு அறிகுறி கண்களுக்கு பின் வலியை சந்திப்பது. அதுவும் கண்களை அசைத்தால் கண் வலியுடன் கண்களில் மிகுந்த அசௌகரியத்தை சந்திக்க நேரிடும். இப்படியான வலியானது காய்ச்சல், தலைவலியுடன் சேர்ந்து இருக்கும்.

4. தசை மற்றும் மூட்டு வலி

டெங்குவால் பாதிக்கப்பட்டால் உடல் வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி தான் தசை மற்றும் மூட்டு வலி. இதனால் இந்த டெங்கு காய்ச்சலை எலும்புமுறிவு காய்ச்சல் என்றும் அழைக்கிறார்கள். இந்த வகையான உடல் மற்றும் தசை வலி தாங்க முடியாத அளவில், அதுவும் கை, கால்களை அசைக்க முடியாத அளவில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.

5. குமட்டல் மற்றும் வாந்தி

டெங்கு வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அந்நபர் வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை மற்றும் அடிவயிற்று வலியுடன் தொடர்ச்சியான குமட்டல் அல்லது வாந்தியை அனுபவிக்கக்கூடும்.

6. சரும அரிப்பு

காய்ச்சலைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு பின் உடலில் சிவப்பு நிற தடிப்புகளும், அரிப்புகளும் ஏற்படுகிறதா? அப்படியானால் அது டெங்குவின் அறிகுறியாகும். எனவே காய்ச்சலுடன், சரும அரிப்பை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

7. இரத்தக்கசிவு

டெங்கு தீவிரமான நிலையில், ஈறுகளில் இரத்தக்கசிவு, மூக்கில் இரத்தம் வடிதல், இரத்த வாந்தி, மலத்தில் இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் தென்படும். அதுவும் இப்படியான அறிகுறிகள் தெரியத் தொடங்கினால், அது டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலின் அறிகுறியாகும். இதற்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவை.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, January 22, 2026, 12:22 [IST]
Desktop Bottom Promotion