International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..

International Yoga day 2026: தினசரி பெரும்பாலானோர் சந்திக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை தான் செரிமான பிரச்சனை. இந்த செரிமான பிரச்சனை என்றாலே அதில் அஜீரண கோளாறு, வாய்வு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பல பிரச்சனைகள் அடங்கும். இப்படி ஒருவர் செரிமான பிரச்சனைகளை சந்திக்க பல காரணங்கள் உள்ளன.

International Yoga day 2026 Yoga Asanas For Gas Problem And Better Digestion

அதில் ஆரோக்கியமற்ற உணவுகள், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, உண்ணும் உணவில் கட்டுப்பாடு இல்லாதது மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றால் சந்திக்கும் செரிமான பிரச்சனைகளை தவிர்க்க யோகாசனங்கள் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா?

யோகா என்பது இந்தியாவின் பழம்பெரும் கலைகளுள் ஒன்றாக போற்றப்படுகிறது. இப்படிப்பட்ட யோகாசனங்களைக் கொண்டு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்யலாம் மற்றும் தடுக்கலாம். இந்த யோகாவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு, பெரும்பாலான மக்கள் சந்திக்கும் செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் குறித்து டாக்டர் நர்மதா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. பவனமுக்தாசனம் (Pawanmuktasana)

* பவனமுக்தாசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த ஆசனத்தின் போது மூச்சை சீராக விட வேண்டும். இந்த ஆசனம் செய்து வருவதன் மூலம், வாய்வு தொல்லை மற்றும் மலச்சிக்கல் நீங்கும்.

2. வஜ்ராசனம் (Vajrasana)

* முதலில் தரையில் இரண்டு கால்களையும் நீட்டி நேராக உட்கார வேண்டும்
* பின் வலது குதிகாலை வலப் பிட்டத்தின் அடியில் மடித்து வைக்க வேண்டும்.
* பின்பு இடது குதிகாலை இடப் பிட்டத்தின் அடியில் மடித்து வைக்க வேண்டும்.
* இந்நிலையில் முழுங்கால்கள் இரண்டும் இணைந்து இருக்க வேண்டும். உள்ளங்கைகள் இரண்டும் முழங்கால்கள் மீது வைக்க வேண்டும்.
* பின் மெதுவாக 4 வரை எண்ணிக் கொண்டே மூச்சை உள்ளிழுத்து, பின் 8 வரை எண்ணிக் கொண்டே மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.
* பின்பு மெதுவாக ஒவ்வொரு கால்களை நீட்டி, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.இந்த னத்தை முதலில் 3-4 நிமிடங்கள் செய்ய வேண்டும். பின் போக போக மெதுவாக 5-7 நிமிடங்கள் வரை அதிகரித்து செய்யலாம்.

3. பாலாசனம் (Balasana)

* முதலில் தரையில் இரண்டு கால்களையும் மடக்கி பிட்டத்தின் மீது உட்கார வேண்டும். அப்போது கால் பெருவிரல்கள் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று இணைந்து இருக்க வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்தவாறு இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்க வேண்டும்.
* பின்பு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே முன்னோக்கி குனிய வேண்டும். அப்போது நெற்றியானது தரையைத் தொட வேண்டும். முக்கியமாக பிட்டத்தை தூக்கக் கூடாது.
* இந்நிலையில் சாதாரணமாக சுவாசித்துக் கொண்டே 2-3 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
* பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். * இப்படி 5-10 முறை செய்யலாம்.

4. அர்த்த மத்ஸ்யேந்திராசனம் (Ardha Matsyendrasana)

* முதலில் தரையில் நேராக அமா்ந்து கொண்டு, நமக்கு முன் பக்கமாக கால்களை விாித்து நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
* இடது காலை வளைத்து, அதன் பாதத்தைக் கொண்டு நமது வலது பக்க புட்டத்தைத் தொட முயற்சிக்க வேண்டும்.
* வலது பாதத்தை, இடது முட்டிக்கு வெளியே கொண்டு வந்து, தரையைத் தொட வேண்டும்.
* தண்டுவடத்தை வளைக்காமல் நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது மூச்சை வெளியில் விட்டு, உடலின் மேல் பகுதியை வலது பக்கமாகத் திருப்ப வேண்டும்.
* இடது கையால் வலது பாதத்தை பிடித்துக் கொண்டு, தண்டுவடப் பகுதியில் வலது கையை வைத்துக் கொள்ள வேண்டும்.
* இந்த ஆசனம் நமது தண்டுவடத்திற்கு அதிக நெகிழ்வு தன்மையை வழங்கும். மேலும் நமது வயிற்று தசைகளை சீா்படுத்தும்.

5. பச்சிமோத்தாசனம் (Paschimottanasana)

* முதலில் தரையில் அமர்ந்து கால்களை நன்றாக நீட்டி, கால் விரல்களைத் தளா்வாக வைத்து அமா்ந்து கொள்ள வேண்டும்.
* பின் மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே நமது கைகளை மேலே தூக்க வேண்டும்.
* இப்போது அடி வயிற்றை உள்ளிழுத்து மெதுவாக மூச்சை வெளியில் விடவேண்டும்.
* அடுத்ததாக அப்படியே முன்புறமாக குனிந்து கால் விரல்களை கைகளால் பிடிக்க வேண்டும்.
* குனிந்து இருக்கும் போது நமது முழங்கைகள் வெளிப்புறமாகவோ அல்லது கீழ்புறமாகவோ இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.

6. மர்ஜாரியாசனம் (Marjaryasana)

* இந்த ஆசனத்திற்கு முதலில் கால்களை மடக்கி, முட்டி போட்டு, பாதத்தின் மீது அமருங்கள். பின் ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து பின் வெளிவிடவும்.
* பின் கைகளை தரையில் ஊன்றி, மெல்லமாக முதுகை உட்பக்கமாக வளைத்து, தலையை மேலே தூக்குங்கள். தலை மேலே தூக்கும்போது, முதுகு உட்பக்கமாக வளைந்து தான் இருக்க வேண்டும்.
* சில நொடிகளுக்கு பின், தலையை குனிந்து முதுகை லேசாக தூக்க வேண்டும். பாதங்கள் முழுவதும் தரையோடு தரையாக இருக்க வேண்டும். உள்பாதம் மேலே பார்த்தபடி இருக்க வேண்டும்.
* பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு வர வேண்டும். மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து வெளிவிடுங்கள். இந்த ஆசனத்தை இப்படி 20 முறை செய்யுங்கள்.

"மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆசனங்களை தினமும் சீரான சுவாச பயிற்சியுடன் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இது தவிர தினமும் போதுமான அளவு நீரை அருந்த வேண்டும் மற்றும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வாய்வு, வயிற்று உப்புசம், அடிவயிற்று வலி போன்றவை தொடர்ச்சியாகவோ அல்லது தீவிரமாகவோ இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்." என்றும் டாக்டர் கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, June 16, 2026, 15:30 [IST]
Desktop Bottom Promotion