For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீக்கம் மற்றும் கட்டிகளை கரைக்கும் விராலி செடியின் நன்மைகள்!!

விராலி மூலிகையின் மருத்துவ நன்மைகளைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

தமிழகத்தில் பொதுவாக காடுகள் மற்றும் சமவெளிகளில் வளரும் மூலிகைகளில் சிறந்த ஒரு மூலிகைச்செடியாக, விராலி விளங்குகிறது.

Hymenodictyon Exclusum எனும் தாவரவியல் பெயர்கொண்ட குருஞ்செடியான விராலி, ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள புதர்க்காடுகளில் வறட்சியைத்தாங்கி வளரும் இயல்புடையது. சூரிய ஒளியை நோக்கும் விதமாக, மேல்நோக்கி அமைந்திருக்கும் இதன் இலைகள், எளிதில் அவற்றிலிருந்து சாறு எடுக்க இயலாவண்ணம் வறண்ட இலைகளைக் கொண்டு அமைந்தவை.

Health benefits of Hymenodictyon Excelsum

Image source

முன்னோர்கள், ஆயக்கலைகள் 64 என வகுத்த கலைகளில் ஒன்றான இரச வாதம் எனும் கலை, பொருட்களின் இயல்பான தன்மையை மாற்றி, அவற்றைக்கொண்டு, விலை மதிப்புமிக்க தங்கம் வெள்ளி போன்ற உலோகங்கள் உள்ளிட்ட விலை மதிப்பில்லா பல அரிய பொருட்கள் மற்றும் மனித உடலுக்கு வியாதிகள் அணுகா கற்ப மருந்துகள் தயாரிக்க உதவுவதாகும்.

அத்தகைய இரச வாதத்திற்கு அடிப்படையான முக்கியமான ஒரு மூலிகைதான் விராலி. சாறே எடுக்க முடியாத விராலி இலைகளிருந்து சாறெடுக்கும் வல்லமையே, இரச வாதத்துக்கு முதல் படி என்பது மட்டுமல்ல, அப்படி விராலி சாறெடுக்கும் வல்லமை மிக்கவரே, சிறந்த சித்த வைத்தியர் என சித்தர்கள் உரைக்கின்றனர்.

இப்படி அரிய ஆற்றல் கொண்ட விராலி இலைகள், அவற்றின் பட்டைகள் மற்றும் விதைகள், எலும்பை வலுவாக்கும், வீக்கம் மற்றும் கட்டிகளை கரைக்கும், ஜுரம் போக்கி உடல் சுவாச பாதிப்புகளை சரிசெய்யும் அரும்பெரும் மருத்துவ குணங்கள் கொண்டவை ஆகும்.

தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை, தேசமெங்கும் உள்ள மலைக் குன்றுகளின் உச்சிகளில் கோவில்கள் அமைத்து வணங்குவர். அவ்விடங்கள் எல்லாம் சிறப்பான மூலிகைகளை மிக அதிகம் கொண்டு, அவற்றின் பெயராலேயே அழைக்கப்படும். அப்படி மருத மரங்கள் நிரம்பிய குன்றான குமரன் உறையும் மலையே, மருதமலை என ஆகியது.

விராலிச் செடிகள் நிறைந்திருந்த, விராலிமலை, முருகக் கடவுளின் திருச்சிறப்புமிக்க திருத்தலமானது.

மருத மரம், மனிதர்க்கு ஏற்படும் இரத்த அழுத்த குறைபாடுகளை சரி செய்யும் அற்புத மரமாகும். விராலிச்செடிகள் மனிதர்க்கு உடலில் ஏற்படும் கட்டிகள், வீக்கங்கள் இவற்றை போக்கி, எலும்புகளை வலுவாக்கி, இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக்கும் ஆற்றல் மிக்கது.

வியாதி எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகையான விராலி, உடலில் உள்ள நுண்ணிய நச்சு கிருமிகள் மற்றும் ஃபங்கஸ் எனும் பூஞ்சை தொற்றுகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது. சிறுநீரகத்தில் உண்டாகும் சர்க்கரை பாதிப்பை, சரிசெய்யும் தன்மை மிக்கது.

சிறந்த மூலிகை நிவாரணியான விராலி, உடலில் அதிக அளவு வியர்வையை வெளியேற்றி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் வெப்பத்தை தணித்து, உடலுக்கு குளிர்ச்சியை தரும் வல்லமை மிக்கதாகும். உடலின் முக்கிய உறுப்புகளின் இயக்கத்தை சரிசெய்து, நரம்புகளை சீராக்கி, உடலை வலுவாக்கி, புத்துணர்ச்சி அளிக்கும். அலர்ஜி எனும் ஒவ்வாமைக்கு சிறந்த தீர்வாகிறது விராலி இலைகள்.

விராலி இலைகளின் மருத்துவ பலன்கள்:

உடலில் சூடு காரணமாகவோ அல்லது இரத்தம் கெடுவதாலோ ஏற்படும் கட்டிகள், வீக்கம் போன்றவை குணமாக, விராலி இலைகளின் மீது சிறிது விளக்கெண்ணை தடவி, நெருப்பில் சற்றே வாட்டி, கட்டிகள் அல்லது வீக்கங்கள் மீது இரண்டு அடுக்கு அளவில் இலைகளை வைத்து மெலிதான பருத்தித் துணியால் சில தினங்கள் கட்டிவர, கட்டிகள் மறைந்துவிடும் அல்லது கட்டிகள் உடைந்து, விரைவில் ஆறிவிடும். வீக்கங்கள் எல்லாம் சில தினங்களில் கரைந்து விடும்.

உடலில் வலியுள்ள இடங்களில், கைகால் மூட்டுக்களில், தோள்களில், கால்களில், விராலி இலைகளை நல்லெண்ணையில் நன்கு காய்ச்சி, அந்த எண்ணையைக்கொண்டு அவ்விடங்களில் தடவிவர, உடல் வலிகள் படிப்படியாக குறைந்து விடும். மேலும், எலும்புகள் வலிமையடையும்.

சிறிது விராலி இலைகளை நன்கு பொடித்து, மூன்று டம்ளர் நீரில் இரவில் ஊறவைத்து, காலையில் அதில் சிறிதளவை பாலில் கலந்து வருகிவர, உடல் சூடு, இருமல், சளி மற்றும் சுவாசப் பிரச்னைகள் யாவும் சரியாகிவிடும்.

விராலி இலைகளை வாயில் இட்டு சற்றுநேரம் மென்றுவர, பல் வலி, பல் கூச்சம் விலகிடும். பற்களின் ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவுகள், நின்றுவிடும்.

விராலி இலைகளை நீரில் இட்டு பருகிவர, பேதி எனும் வயிற்றுப்போக்கு குணமாகும்.

ஆறாத நெடுநாள் புண்கள் ஆற..

விராலி இலைகள், மஞ்சள், சீரகம் இவற்றை ஒன்று, அரை, கால் என்ற விகிதத்தில் எடுத்து, அதற்கு தகுந்தாற்போல நீரில் கொதிக்க வைத்து, பாதியளவுக்கும் அதிக அளவில் நீர் நன்கு சுண்டியதும், தினமும் இருவேளை கால் டம்ளர் அளவில் பருகிவர, உடலில் வெகுநாட்களாக ஆறாமல் மன வேதனை கொடுத்து வந்த, காயங்களை, புண்களை ஆற்றிவிடும். இந்த மருந்தே, உடலில் உள்ள கட்டிகளையும் கரைக்கும், மேலும், உடலில் இரத்தத்தில் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள சர்க்கரை பாதிப்பை சரிசெய்து, உடலில் சர்க்கரை அளவையும் சீராக்கும் தன்மை மிக்கது.

விராலி பட்டைகளின் மருத்துவ குணங்கள்.

நன்கு உலர்ந்த விராலிப் பட்டைகளை பொடியாக்கி, சிறிதளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட, சளியினால் உண்டான ஜுரம் முதல் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் உண்டாகும் மலேரியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற உடல் நலப் பாதிப்புகள் தரும் காய்ச்சல்கள் யாவும் அகலும். சுவாச பாதிப்புகளை சரிப்படுத்தும்.

விராலிப் பட்டைகள் சிறிது, பத்து மிளகுகள் இவற்றை நன்கு இடித்து, நீரில் கொதிக்க விட்டு, நன்கு கொதித்து மூன்றில் ஒரு பங்காக நீரின் அளவு குறைந்ததும், பின்னர் அந்த நீரைப் பருகிவர, சளியினால் உண்டான காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகளை சுத்தமாக நீக்கி விடும் ஆற்றல் மிக்கது.

விராலிப் பட்டைகளை, மையாக அரைத்து வீக்கங்கள் மீது பற்று போல இட்டு வர, வீக்கங்கள் மற்றும் கட்டிகள் யாவும் கரைந்து, பின்னர் அவை யாவும் உடலிலிருந்து, முழுமையாக மறைந்துவிடும்.

English summary

Health benefits of Hymenodictyon Excelsum

Health benefits of Hymenodictyon Excelsum
Story first published: Thursday, October 12, 2017, 18:23 [IST]
Desktop Bottom Promotion