குழந்தைகளை குறிவைக்கும் சண்டிபுரா வைரஸ்.. 4 குழந்தைகள் மரணம்: இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது?

Chandipura Virus Infection: குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக 4 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த மர்ம காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் குறித்து மருத்துவர்கள் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர். இந்நிலையில் மர்ம காய்ச்சலுக்கு காரணம் சண்டிபுரா வைரஸ் தொற்று என்பது தெரிய வந்துள்ளது.

அதுவும் இந்த வைரஸ் தொற்றினால் இறந்த குழந்தைகள் சந்தித்த அறிகுறிகளை, ராஜஸ்தானை சேர்ந்த மேலும் 2 குழந்தைகளும் சந்திப்பதால், இந்த குழந்தைகளும் சண்டிபுரா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இதை உறுதிப்படுத்த, இறந்த குழந்தைகளின் இரத்த மாதிரிகளுடன், இவ்விரு குழந்தைகளின் இரத்த மாதிரியை எடுத்து, புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்ஐவி) மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

Four Kids Die From Chandipura Virus Infection Heres All You Need To Know About This Condition

இதன் முடிவில் தான் அந்த குழந்தைகள் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா இல்லையா என்பது தெரிய வரும். சரி, சண்டிபுரா வைரஸ் என்றால் என்ன? இது எப்படி பரவுகிறது மற்றும் இதன் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

சண்டிபுரா வைரஸ்

சண்டிபுரா வைரஸ் என்பது புதிய வைரஸ் அல்ல. இது ஏற்கனவே 14 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் பரவி உயிர்களை பறித்துள்ளது. இது தவிர 1965 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா, நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த 17 பேரின் உயிரைப் பறித்துள்ளது. முக்கியமாக இந்த வைரஸ் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிக்கக்கூடியது. எனவே பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

சண்டிபுரா வைரஸ் எப்படி பரவுகிறது?

சண்டிபுரா வைரஸ் கொசுக்கள், மணல் ஈக்கள் மற்றும் உண்ணிகள் மூலம் பரவக்கூடியது. முக்கியமாக மணல் ஈக்கள் மூலமாக தான் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. இப்படியான மணல் ஈக்கள் மணல் கொண்டு கட்டப்பட்டுள்ள வீடுகளில் தான் அதிகமாக காணப்படும். இதனால் இப்படியான தொற்று கிராமப்பகுதிகள் மற்றும் பழங்குடியின மக்களிடையே பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மணல் ஈக்களை விரட்டும் பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.

சண்டிபுரா வைரஸ் தொற்றின் அறிகுறிகள்

சண்டிபுரா வைரஸ் உடலுக்குள் நுழைந்ததும், அது கடுமையான காய்ச்சல், வாந்தி, தலைவலி, சுவாசப்பிரச்சனை போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கும். இன்னும் தீவிர நிலையில் இந்த வைரஸ் மூளையின் திசுக்களில் அழற்சியை ஏற்படுத்தி, மூளையில் வீக்கத்தை உண்டாக்கும். இந்த வைரஸ் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் கடினம்.

ஏனெனில் இதன் அறிகுறிகள் சாதாரண ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இந்த தொற்றிற்கு ஆரம்பத்தில் சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion