ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தாண்டு 'ஸ்பெஷல்' உணவு!

By Mayura Akilan

Food
புத்தாண்டின் முதல் நாள் முதன் முதலாக சந்திக்கும் நபரின் மூலம் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது அநேகம் பேரின் நம்பிக்கை. அதனால்தான் நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது சரியாக பனிரெண்டு மணியானவுடன் சில நொடிகள் விளக்குகள் அணைக்கப்பட்டு பின்னர் ஒளிரச்செய்யப்படுகிறது. அந்த நிமிடத்தில் அவரவருக்கு பிடித்தமானவர்களின் முகத்தில் விழித்து வாழ்த்துக்களை பரிமாறுவது வழக்கமாகி உள்ளது.

உணவும் அதிர்ஷ்டமும்

அதேபோல் பாரம்பரியமான உணவுகள் அதிர்ஷ்டம் தரும் என்ற நம்பிக்கை சில நாட்டு மக்களிடையே உள்ளது. டச்சுக்காரர்கள் புத்தாண்டு நாளன்று சத்தான உலர் பழங்களை உண்பது அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றனர்.

அமெரிக்கா நாட்டு மக்கள் புத்தாண்டு தினத்தன்று காராமணி (Black-eyed peas) எனப்படும் பயறினை உணவாக சமைத்து உண்பது அதிர்ஷ்டம் தரும் என்று கூறுகின்றனர். அதோடு சிறிய ஆட்டின் கொழுப்பு, முட்டைக்கோஸ் போன்ற உணவையும் பாரம்பரியமாக உட்கொள்கின்றனர். முட்டைக்கோஸ் உணவானது அதிக செல்வத்தை தரும் என்பது அமெரிக்கர்களின் நம்பிக்கை. அதனால்தான் அவர்கள் முட்டைக்கோஸ் சேர்த்துக்கொள்கின்றனர்.

பூசணிக்காய் பச்சடி

இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் புத்தாண்டு தினத்தன்று மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் ஏற்பட வேப்பம்பூ பச்சடி, செய்து உண்பது வழக்கமாக உள்ளது. அரிசி உணவும், பூசணிக்காய் பச்சடி, பச்சை மொச்சைக்குழம்பு செய்து உண்பது பாரம்பரியமாக உள்ளது

அதிர்ஷ்டம் தரும் ஒயின்

ரோமானியர்களும், கிரோக்கர்களும் ஒயின் அருந்தி தங்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்குகின்றனர். விருந்தின்போது தங்களின் விருந்தினர்களுக்கும், ஒயின் பரிமாறுவதை பாரம்பரியமாக கருதுகின்றனர். விஷத்தை போக்கும் மருந்தாக ஒயினை உட்கொள்கின்றனர்.

உண்ணக்கூடாத உணவுகள்

மாறிவரும் உணவுப் பழக்கத்தினால் நோய்களின் தாக்குதல் அதிகரிக்கிறது. எனவே சில உணவுகளை முடிந்தவரை இந்த ஆண்டில் இருந்து ஓரம் கட்டி வைப்பது உடல் நலத்திற்கு நன்மை தரும் அதுவே அதிர்ஷ்டம் என்கின்றனர் மருத்துவர்கள். அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள், ஸ்வீட் வகைகள் போன்றவற்றை உண்பதை குறைக்கலாம். பட்டர், கிரீம், சீஸ், அதிகமாக எண்ணெயில் பொறித்த உணவுகள், அதிக காரம் நிறைந்த உணவுகள் அனைத்தையும் குறைக்கலாம். அதிகம் கேஸ் நிறைந்த குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைத்த சிப்ஸ் வகைகள், டின்னில் வரும் உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ப்ரிட்ஜில் வெகுநாட்களுக்கு வைத்து அவற்றை சூடு செய்து சாப்பிடக்கூடாது.

சாலட் காய்கறிகள், பழங்கள்

தினசரி, காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறி சாலட்டில் மிளகு தூள், எலுமிச்சை சாறு, தக்காளி, கோஸ், கேரட், வெள்ளறிக்காய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடவும். மாதம் இருமுறை உண்ணாவிரதம் இருக்கலாம். அதில் வாரம் ஒருநாள் பழங்களை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion