சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் மாரடைப்பின் அபாயம் அதிகமாக உள்ளது? - விளக்கும் மருத்துவர்

Diabetes And Silent Heart Attack: சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் ஆகிய இரண்டும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் மிகவும் பொதுவாக ஒரு நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளாகும். இவ்விரண்டும் ஆழமான தொடர்பு கொண்டவை. அதுவும் சர்க்கரை நோயானது பல்வேறு இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.

எனவே இதய நோய்க்கும், சர்க்கரை நோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்தும், சர்க்கரை நோயாளிகள் ஏன் அமைதியான மாரடைப்புக்கு ஆளாகிறார்கள் என்பது குறித்து அமிஞ்சிக்கரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் சென்டரின் உட்சுரப்பியல் துறையின் அசோசியேட் ஆலோசகர் டாக்டர்.பிரியங்கா விக்னேஷ் தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார். அதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Expert Shares Why Diabetics Are Prone To Experiencing Silent Heart Attacks

சர்க்கரை நோய்க்கும், இதய நோய்க்கும் இடையேயான தொடர்பு

நாள்பட்ட உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகளால் வகைப்படுத்தப்படும் சர்க்கரை நோய், இதயம் மற்றும் வாஸ்குலர் அமைப்பைக் கட்டுப்படுத்தும் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் விரிவான சேதத்தை ஏற்படுத்தும். காலப்போக்கில் இந்த சேதமானது இதய நோயின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உயர் இரத்த சர்க்கரை அளவுகள் வீக்கம் மற்றும் தமனிகளில் ப்ளேக்குகள் உருவாகத் தூண்டி, பெருந்தமனி தடிப்பு அழற்சியை ஏற்படுத்தி, இதயத்திற்கு இரத்த ஓட்டம் செல்வதில் தடையை உண்டாக்கி, கரோனரி தமனி நோய் மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

டைப் 2 நீரிழிவு நோயின் பொதுவான அம்சமான இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. இந்நிலையில் உடலின் செல்கள் இன்சுலினுக்கு திறம்பட பதிலளிக்காது. இதன் விளைவாக இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் டிஸ்லிபிடெமியா (அசாதாரண கொலஸ்ட்ரால் அளவுகள்) ஆகியவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையது. இவை அனைத்தும் ஒன்றிணைந்து இதய நோயின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை அனுபவிக்கிறார்கள். இவை இரண்டும் இதய நோயின் முக்கியமான ஆபத்து காரணிகளாகும். உயர் இரத்த அழுத்தத்தின் போது இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக உழைக்க இதயம் கட்டாயப்படுத்தப்படுகிறது. இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் இறுதியில் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. இதற்கிடையில், உயர்ந்த கொழுப்பு அளவுகள் தமனிகளில் பிளேக்குகளை உருவாக்குவதை ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோயின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மற்றொரு காரணி தான் உடல் பருமன். அதுவும் வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்பு கொண்டுள்ளது. மேலும் இதய பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகளை அதிகம் தாக்கும் அமைதியான மாரடைப்பு

நீரிழிவு நோய்க்கும் இதய நோய்க்கும் இடையே உள்ள தொடர்பின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அமைதியான மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாகும். இந்த அமைதியான மாரடைப்பானது மார்பு வலி அல்லது அசௌகரியம் போன்ற மாரடைப்புடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் இல்லாமல் ஏற்படும். இந்த அறிகுறிகள் இல்லாததால், ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிவது கடினமாக இருக்கும். இதன் விளைவாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் போகிறது.

நியூரோபதி என்னும் நாள்பட்ட நரம்பியல் பிரச்சனையும் சர்க்கரை நோயாளிகளுக்கு அமைதியான மாரடைப்புக்கு பங்களிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். இந்நிலையானது இதயத்திலிருந்து வலி சமிக்ஞைகளை கடத்துவதற்கு பொறுப்பான நரம்புகளை சேதப்படுத்துகிறது. இதன் விளைவாக மாரடைப்பை உணர்த்தும் மார்பு வலி எதுவும் இல்லாமல் அமைதியாக மாரடைப்பு ஏற்படலாம்.

அதுவும் மாரடைப்பின் முக்கிய அறிகுறியான மார்பு வலிக்கு பதிலாக, சோர்வு, மூச்சுத் திணறல், அஜீரணம், கழுத்து, தாடை அல்லது முதுகில் அசௌகரியம் போன்ற அறிகுறிகளை சந்திக்கலாம். இந்த அறிகுறிகள் மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் தவறவிடலாம்.

முடிவுரை

சர்க்கரை நோய்க்கும் இதய நோய்க்கும் இடையிலான தொடர்பு சிக்கலானது. சர்க்கரை நோயாளிகள் இதய பிரச்சனைகளின் குறிப்பிடத்தக்க அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். அதற்கு உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகள், இன்சுலின் எதிர்ப்பு, பெருந்தமனி தடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை முக்கிய காரணிகளாகும்.

அதுவும் சர்க்கரை நோயாளிகளில் அமைதியான மாரடைப்பு அதிகம் ஏற்படுவதால், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மருந்துகளை கடைபிடிப்பது மற்றும் வழக்கமான பரிசோதனைகள் ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், நீரிழிவு நோயாளிகள் தங்கள் இதய நோய் அபாயத்தை திறம்பட நிர்வகிக்கலாம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion