கால்களில் தெரியும் இந்த ஒரு அறிகுறி 3 கொடிய நோய்களின் எச்சரிக்கை அறிகுறியா இருக்கலாம்.. ஜாக்கிரதை...

Edema Reasons In Tamil: தற்போதைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயம் அதிகரிக்கின்றன. குறிப்பாக உயிரைப் பறிக்கும் பல நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. இப்படி உடலில் ஏதேனும் நோய் உள்ளது என்றால், அதை நமது உடல் நமக்கு ஒருசில அறிகுறிகளின் மூலம் தெரியப்படுத்தும்.

அந்த அறிகுறிகளை ஒருவர் கவனித்து, மருத்துவரை அணுகினால், கொடிய நோய்களுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்து சரிசெய்துவிடலாம். ஆனால் நாம் சந்திக்கும் நோய்களின் அறிகுறிகளானது, தினமும் சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று இருப்பதால், பெரும்பாலானோர் அசால்ட்டாக கண்டு கொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள்.

Edema In Tamil This One Sign Can Be The Symptoms Of 3 Deadly Diseases

உதாரணமாக, நுரையீரல் புற்றுநோயின் ஒரு பொதுவான அறிகுறி நாள்பட்ட இருமல். ஆனால் நிறைய பேர் இருமலை ஒரு பருவகால பிரச்சனையாக நினைத்து, புறக்கணித்துவிடுகிறார்கள். அதற்காக நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஆரோக்கிய பிரச்சனைக்கும், தீவிர நோய் தான் காரணம் என்று அர்த்தமல்ல. அதே சமயம் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

அந்த வகையில் முக்கியமான ஒரு அறிகுறி 3 கொடிய நோய்களின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்று நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதுவும் அந்த அறிகுறியானது விரல்கள் மற்றும் கால்களில் தான் பெரும்பாலும் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

பொதுவாக, விரல்கள், மணிக்கட்டு, கைகள், கால்கள் போன்ற பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தை எடிமா என்று அழைப்பர். இது சிறுநீரக நோய், கல்லீரல் நோய் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக எப்போது உடலில் திரவங்கள் தேங்க ஆரம்பிக்கிறதோ, அப்போது தான் விரல்கள், கைகள் மற்றும் மணிக்கட்டுகளில் வீக்கங்கள் ஏற்படும். இப்போது இந்த நோய்கள் எதனால் இம்மாதிரியான வீக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் காண்போம்.

சிறுநீரக நோய்

நமது உடலில் சிறுநீரகங்கள் திரவங்களை சமநிலையில் பராமரிப்பதற்கும், உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் எப்போது சிறுநீரகங்களில் நோய்கள் அல்லது கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதோ, அப்போது சிறுநீரகங்களின் செயல்பாடு பலவீனமாகி, உடலில் திரவங்கள் தேங்க ஆரம்பித்து, எடிமாவை உண்டாக்கும். சிறுநீரக நோயின் பிற அறிகுறிகளாவன குறைவாக சிறுநீர் கழிப்பது, உடல் களைப்பு, குமட்டல், வாந்தி, சிறுநீரில் இரத்தம் போன்றவை.

கல்லீரல் நோய்

கல்லீரல் நோயின் போது இரத்தத்தில் திரவங்களின் சமநிலையைப் பராமரிக்க உதவும் புரோட்டீன்களின் உற்பத்தி குறைகிறது. மேலும் திரவங்களானது திசுக்களில் நுழைந்து எடிமாவை ஏற்படுத்தலாம். அதுவும் இந்த வீக்கமானது வயிறு, கால்களில் தெரியும். அதோடு ஒருவருக்கு கல்லீரல் நோய் இருந்தால், சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும், எளிதில் சிராய்ப்புகள் ஏற்படும், சிறு காயங்கள் ஏற்பட்டாலும் இரத்தம் அதிகம் வழியும், வயிற்று வலி மற்றும் வீக்கத்தை சந்திக்க நேரிடும். அதோடு கால்களில் அரிப்பு, அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறும் மற்றும் வெளிரிய நிறத்தில் மலம் வெளியேறும்.

இதய செயலிழப்பு

கடைசியாக, நுரையீரல் மற்றும் பிற திசுக்களில் திரவக்ள் தேங்கும் போது, இதயத்தால் திறம்பட இரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல், ஒரு கட்டத்தில் இதய செயலிழப்பை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த இதய செயலிழப்பின் பிற அறிகுறிகளாவன மூச்சு திணறல், நாள்பட்ட இருமல், சீரற்ற இதயத் துடிப்பு, களைப்பு மற்றும் மிகுதியான உடல் பலவீனம்.

எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். புறக்கணித்தால், பின் உயிரையே இழக்க நேரிடும். எனவே ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, May 5, 2024, 12:00 [IST]
Desktop Bottom Promotion