வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி!

Egg Dosa: தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு டிபன் தான் தோசை. சொல்லப்போனால் பெரும்பாலான வீடுகளில் காலை, இரவு நேரங்களில் டிபனாக தோசை தான் இருக்கும். இந்த தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. இது அவற்றில் சேர்க்கப்படும் பொருட்களுக்கு ஏற்ப மாறுபடும். இப்படிப்பட்ட தோசை அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படுவதால், சர்க்கரை நோயாளிகள் தோசை சாப்பிடுவது நல்லதல்ல என்ற ஒரு கருத்து உள்ளது.

Doctor Explains Why Egg Dosa Is Better Than Normal Dosa

ஆனால் வெறும் தோசையாக சாப்பிடுவதை விட முட்டை தோசையாக சாப்பிட்டால் மிகவும் நல்லது என்று டாக்டர் பிரகாஷ்மூர்த்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த இரண்டு தோசையிலும் மாவு தானே உள்ளது, என்ன வித்தியாசம் என்று பலரும் கேட்கலாம். உங்களின் இந்த கேள்விக்கான பதிலை தெளிவாக டாக்டர் விளக்கியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, ஒரு டம்ளர் பாலில் சர்க்கரையை கலந்தால், எப்படி அது இனிப்பு சுவையை அதிகமாக்குகிறதோ, அதேப் போல் சாதாரண மாவு தோசையாக இருந்தாலும் அதோடு முட்டையை சேர்க்கும் போது, அது சர்க்கரையை அதிகரிக்கும் தன்மையைக் குறைக்கிறது. அதற்கு பின்னிருக்கும் 3 மருத்துவ விளக்கங்களையும் டாக்டர் பகிர்ந்துள்ளார்.

1. முட்டை என்பது கிளைசீமிக் லோடு இல்லாத ஒரு பொருள். இதை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கவே அதிகரிக்காது.

2. அரிசி மாவோடு முட்டையைக் கலந்து, முட்டை தோசையாக ஊற்றும் போது சர்க்கரையின் உறிஞ்சும் தன்மை குறைகிறது.

3. முட்டை கொழுப்புச்சத்து நிறைந்தது என்பதால் நீண்ட நேரம் பசி எதுவும் எடுக்காமல் வயிறு நிரம்பியிருப்பதால், தேவையில்லாமல் ஸ்நபக்ஸ் சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் எழாது.

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

"முட்டை அதிகம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடுமோ என்று பலரும் அச்சம் கொள்கின்றனர். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தாராளமாக ஒரு நாளைக்கு 2-3 முட்டை சாப்பிடலாம். அதனால் தவறே கிடையாது.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து ஒரு நாளைக்கு 5-10 முட்டை சாப்பிடுபவர்கள் தான் ஹைப்போரெஸ்பான்டரா அல்லது ஹைப்பர்ரெஸ்பான்டரா என்பதை ஒரு பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

சாதாரணமாக சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு 2-3 முட்டை முழுதாக சாப்பிடலாம். அதனால் கொலஸ்ட்ரால் எதுவும் ஏறாது என்பது தான் சமீபத்திய வழிகாட்டுதல்கள்" என்று டாக்டர் கூறினார்.

முட்டையை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

"பொதுவாக சர்க்கரை நோயாளிகளை குதிரைவாலி, சாமை, தினை, வரகரிசி எல்லாம் சாப்பிட சொல்வார்கள். ஆனால் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த சிறுதானியங்கள் கிடைக்காது. ஆனால் உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடியது தான் முட்டை.

ஒருவேளை தோசை மாவு இல்லாமல், பிரட் இருந்தாலும், வெறும் பிரட் சாப்பிடாமல், முட்டையை சேர்த்து பிரட் ஆம்லெட்டாக சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அதிகரிப்பது குறையும்.

ஒருவேளை பிரட்டும் இல்லை, தோசை மாவும் இல்லை, வெறும் முட்டை தான் உள்ளது என்றால், 3 முட்டையை வேக வைத்து, அத்துடன் ஏதாவது ஒரு பழத்தை சேர்த்து சாப்பிட்டால், ஒரு முழு காலை உணவு தயாராகிவிடும்.

காலை உணவு மட்டுமின்றி, மதிய உணவாக இருந்தாலும் சரி, இரவு உணவாக இருந்தாலும் சரி, மாவுச்சத்து மட்டும் எடுக்காமல், அத்துடன் புரோட்டீன், கொழுப்புச்சத்து மற்றும் நார்ச்சத்தையும் சேர்த்து சாப்பிடும் போது, சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சர்க்கரை நோய் என்பது முழுக்க முழுக்க உணவு முறையால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நிலையே தவிர, ஒரு நோய் கிடையாது." என்றும் டாக்டர் கூறினார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion