ஆட்டுக்கால் சூப் குடிச்சா.. மூட்டு வலி பறந்துபோகும் என்பது உண்மையா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க..

Mutton Leg Soup And Joint Pain: தற்போது மூட்டு வலி, முதுகு வலி பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுவாக இப்படி மூட்டு வலியால் அவதிப்பட்டால், அக்காலத்தில் ஆட்டுக்கால் சூப் வைத்து குடித்தால் சரியாகும் என்று கூறுவார்கள்.

அதுவும் ஆட்டுக்காலை பக்குவமாக வேக வைத்து, மசாலாவை அரைத்து சேர்த்து அடிக்கடி குடித்து வந்தால், உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி என அனைத்து வலிகளும் பறந்து போகும் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே ஆட்டுக்கால் சூப் மூட்டு வலியை குணப்படுத்துமா என்ன? இதுக் குறித்து டாக்டர் அருண்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில், அதன் உண்மை தன்மை குறித்து விரிவாக கூறியுள்ளார்.

Doctor Explains How Mutton Leg Soup Cure Joint Pain

அதில் அவர் கூறியதாவது, "அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று தான் ஆட்டுக்கால் சூப். இந்த சூப்பை செய்து கொடுத்தால் வேண்டாம் என்று யாருமே கூறமாட்டார்கள். பொதுவாக மட்டன் சாப்பிடுவதற்கும், ஆட்டுக்காலை சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மட்டனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே புரோட்டீனை அதிகம் பெற நினைப்பவர்கள் மட்டனை சாப்பிடலாம்.

ஆனால் ஆட்டுக்காலை ஒருவர் சூப்பாக சாப்பிடுவதன் மூலம், அதிலிருந்து கொலாஜன், ஜெலாட்டின், கிளைகோஸ்அமினோ கிளைகான்கள், காண்ட்ராடின் போன்றவை கிடைக்கின்றன. இதில் கொலாஜன் என்பது நமது திசுக்களில் உள்ள ஒருவிதமான புரோட்டீன் ஆகும். இது தவிர ஆட்டுக்காலை நீரில் கொதிக்க வைக்கும் போது சில வகையான அமினோ அமிலங்களான கிளைசீன் போன்றவையும் அந்த நீரில் வெளியிடப்பட்டு, நமக்கு கிடைக்கின்றன." என்று கூறினார்.

பொதுவாக கொலாஜனை உணவில் இருந்தோ அல்லது சப்ளிமெண்ட்டுகளாகவோ மூட்டு வலி உள்ளவர்கள் எடுத்து வந்தால், அதன் மூலம் மூட்டு வலியில் உள்ளவர்களின் மூட்டுக்களில் உள்ள காயங்களை குறைத்து, வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுவதாக கூறினார்.

மேலும் 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மூட்டு வலி உள்ள ஒரு குழுவினருக்கு ஆட்டுக்கால் சூப் தொடர்ந்து கொடுக்கப்பட்டது. அதில் அந்த குழுவில் உள்ளவர்களுக்கு இருந்த மூட்டு வலிக்கான அறிகுறிகள் குறைந்திருப்பது தெரிய வந்தது. இதற்கெல்லாம் காரணம் ஆட்டுக்காலில் உள்ள கொலாஜன், ஜெலாட்டின், கிளைசீன் என்னும் அமினோ அமிலம் போன்றவை தான் என்றும் ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளதாக டாக்டர் அருண்குமார் கூறினார்.

முக்கியமாக ஆட்டுக்கால் சூப்பை வழக்கமாக செய்வது போன்று செய்து குடிக்காமல், ஆட்டுக்காலை நீரில் போட்டு குறைவான தீயில் குறைந்தது 10-12 மணிநேரம் கொதிக்க வைத்து, அந்த சூப்பைக் குடிக்கும் போது, ஆட்டுக்காலில் உள்ள அனைத்து சத்துக்களும் முழுமையாக உடலுக்கு கிடைத்து, மூட்டு வலியில் இருந்து இன்னும் நல்ல நிவாரணம் கிடைப்பதாகவும் டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.

மொத்தத்தில் ஆட்டுக்கால் சூப் குடித்தால் மூட்டு வலி பறந்துபோகும் என்பது உண்மை தான். அதுவும் ஆட்டுக்காலை பழங்காலத்தில் நம் முன்னோர்கள் சமைத்த விதத்தில், அதாவது 10-12 மணிநேரம் குறைவான தீயில் ஆட்டுக்காலை நீரில் கொதிக்க வைத்து குடிக்கும் போது இன்னும் நல்ல பலன் கிடைக்கும். நீங்களும் முயற்சித்து பார்த்து, எப்படி இருந்தது என்று கூறுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

FAQs
ஆட்டுக்கால் சூப் அனைத்து வயதினருக்கும் ஏற்றதா?

ஆட்டுக்கால் சூப் பொதுவாக அனைத்து வயதினருக்கும் ஏற்றது. ஆனால் சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதை மிதமாக உட்கொள்வது நல்லது.

நோய்வாய்ப்பட்டு மீண்டு வருபவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் எவ்வாறு ஆதரிக்கிறது?

ஆட்டுக்கால் சூப் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், செரிமானமாக எளிதானதாகவும் இருப்பதால், நோய்வாய்ப்பட்டு மீண்டு வருபவர்களுக்கு அடிக்கடி இந்த சூப் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இது உடல் வலிமையை மீட்டெடுக்க உதவுகிறது.

ஆட்டுக்கால் சூப்பின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

ஆட்டுக்கால் சூப் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றை வழங்கி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆதரிக்கிறது. மேலும் ஆட்டுக்கால் சூப்பில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள், வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவுகின்றன.

BoldSky Lifestyle

Desktop Bottom Promotion