உணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா? இதைப்படிங்க!

By Mayura Akilan

Sugar - a sweet poison
உணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய், எலும்பு முறிவுநோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது. உண்மையில் நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.

சிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை அதிக ஆபத்தானது எனலாம். புற்றுநோய், எலும்பு முறிவுநோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதயநோய்கள், இரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சர்க்கரை உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

காபி, டீ, பால் போன்றவைகளில் சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர். சர்க்கரை அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு

நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. அதேபோல் குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட்

மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. சர்க்கரையும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்து விடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசை நார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப்பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.

உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத்தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டே கிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது. கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சர்க்கரை இன்னும் துரிதப்படுத்துகிறது.

தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு சர்க்கரையே காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, July 1, 2012, 9:44 [IST]
Desktop Bottom Promotion