இந்த உணவுகளை தினமும் சாப்பிடாதீங்க.. இல்லன்னா சர்க்கரை நோய் சீக்கிரம் வந்துடும்...

Diabetes In Tamil: உலகிலேயே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். மேலும் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயாயது சர்க்கரை சாப்பிடுவதால் மட்டும் வருவதில்லை, நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்களினாலும் தான் வருகிறது. இது தவிர பரம்பரையில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால், அவர்களுக்கும் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

என்ன தான் சர்க்கரையால் மட்டும் சர்க்கரை நோய் வராவிட்டாலும், நாம் தினமும் சாப்பிடும் சில உணவுகளாலும் சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. அதுவும் தற்போது நிறைய பேர் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளை தினந்தோறும் தங்களின் உணவில் சேர்த்து வருகிறார்கள். உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாது என்று விரும்பினால், பின்வரும் உணவுகளை தினமும் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

Diabetes: Eating These Foods Daily Increase Blood Sugar In Tamil

சாதம்

இந்தியாவில் சாதம் தான் மிகவும் முக்கியமான உணவு. இந்தியர்களால் சாதம் சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால் இந்த சாதத்தை தினமும் அதிகளவில் உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரைஅளவை அதிகரித்து விடும். ஏனெனில் சாதத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம். எனவே உடலுக்கு போதுமான உழைப்பு இல்லாமல், தினமும் மூன்று வேளையும் சாதத்தை உட்கொண்டு வந்தால், அது சர்க்கரை நோயை விரைவில் வரவழைத்துவிடும்.

வாழைப்பழம்

அனைத்து பருவங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம் தான் வாழைப்பழம். என்ன தான் வாழைப்பழம் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய சத்தான பழமாக இருந்தாலும், வாழைப்பழத்தில் தேனிற்கு இணையான கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளது. இந்த வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, இதில் உள்ள இயற்கை சர்க்கரை இரத்த சர்க்கரை அளவில் இடையூறை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும்.

வெள்ளை பிரட்

மேற்கத்திய நாடுகளைப் போன்றே இந்தியாவிலும் மக்களின் காலை உணவாக பிரட் விளங்குகிறது. நிறைய பேர் காலை வேளையில் பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்து, அதன் மேல் வெண்ணெய் தடவி அல்லது முட்டைகள் அல்லது காய்கறிகளை வைத்து சாண்விட்ச் தயாரித்து சாப்பிடுகிறார்கள். ஆனால் வெள்ளை பிரட்டுகளானது மைதாவால் ஆனது. மைதா உணவுகள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தக்கூடியது. எனவே நீங்களும் பிரட்டுகளை தினமும் உட்கொண்டு வந்தால், உங்களுக்கு சர்க்கரை நோய் வர நிறைய வாய்ப்புள்ளது.

சோடா

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை பானங்கள் அல்லது சோடா பானங்களை தெரியாமலும் குடிக்கக்கூடாது. ஏனெனில் இந்த பானங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஏராளமான அளவில் உள்ளன மற்றும் இவற்றில் எவ்வித சத்துக்களும் இல்லை. எனவே இந்த சோடா பானங்களை ஒருவர் அடிக்கடி வாங்கி குடித்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

உருளைக்கிழங்கு

பெரும்பாலானோரின் விருப்பமான ஒரு காய்கறி தான் உருளைக்கிழங்கு. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், உருளைக்கிழங்கை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனின்ல உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கக்கூடியவை. எனவே வயது அதிகரிக்கும் போது, உருளைக்கிழங்குகளை தினமும் உணவில் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் சர்க்கரை நோயால் அவதிப்பட நேரிடும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, April 18, 2023, 12:45 [IST]
Desktop Bottom Promotion