13 வயது சிறுமியின் உயிரைப் பறித்த மூளையை தின்னும் அமீபா: இது எப்படி உடலில் நுழைகிறது? அதன் அறிகுறிகள் என்ன?

Brain-Eating Amoeba Killed 2 Kids In Kerala: கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவால் 13 வயது சிறுமி பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சிறுமி அமீபிக் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கண்ணூரில் உள்ள தோட்டாவைச் சேர்ந்த ராகேஷ் பாபு மற்றும் தன்யா அவர்களின் மகள் தான் 13 வயது சிறுமி தக்ஷினா.

இந்த சிறுமி ஆரம்பத்தில் தலைவலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு, மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் போக போக உடல்நிலை மோசமடைந்து வந்ததால், அவர் கோழிக்கோட்டில் உள்ள தனியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அச்சிறுமிக்கு பலவிதமான சோதனைகள் செய்யப்பட்டது. சோதனை முடிவில் அந்த சிறுமிக்கு அரிய வகை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

Brain-Eating Amoeba Killed 2 Kids In Kerala Here s All You Need To Know About It

இந்த வகை நோய்க்கிருமியானது நீரின் வழியாக உடலினுள் நுழையும். இந்த சிறுமி சில நாட்களுக்கு முன் மூணாறுக்கு பள்ளி சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு குளத்தில் குளித்த போது, அந்த அமீபா அச்சிறுமியின் உடலுக்குள் நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது குழந்தை அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மே மாதத்தில் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூளையைத் தின்னும் அமீபா

அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு காரணமான அமீபாவானது ஏரிகள், ஆறுகள் மற்றும் ஊற்றுகள் போன்ற நீர்நிலைகளில் வாழக்கூடியது. இந்த அமீபா மண்ணிலும் வாழக்கூடியது. இந்த அமீபா மனிதர்களின் உடலுக்குள் சென்றால் அது அமீபிக் மூளைக்காய்ச்சல் என்னும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) என்ற நிலையை உண்டாக்கும். அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒரு தீவிரமான தொற்றாகும். இது மிகவும் ஆபத்தானது.

நீர் நிலைகளில் வாழும் இந்த அமீபா, மூக்கின் வழியே மனித உடலுக்குள் எளிதில் நுழைந்து, மூளையை அடைந்து, மோசமாக பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வகை அமீபா நீச்சல், டைவிங் அல்லது வாட்டர் ஸ்கையிங் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது உடலினுள் நுழைய அதிக வாய்ப்புள்ளது.

மூளையை தின்னும் அமீபா நோயெத்தொற்றின் அறிகுறிகள்

ஒருவருக்கு மூளையை தின்னும் அமீபா தொற்று ஏற்பட்டால், அது பின்வரும் அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவை:

* அதிகமான காய்ச்சல்
* மிகுந்த தலைவலி
* குமட்டல், வாந்தி
* நடுக்கம்

தீவிர நிலையில் தெரியும் அறிகுறிகள்:

* போட்டோஃபோபியா
* கழுத்துப் பிடிப்பு
* மனக்குழப்பம்
* கோமா

இப்படிப்பட்ட மூளை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்வர்களுக்கு சிகிச்சை அளித்தாலும், இறப்பு விகிதமானது 97 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமீபா தொற்றைத் தடுக்கும் வழிகள்

* வெதுவெதுப்பான நன்னீரில், குறிப்பாக தேங்கிய நீர்நிலைகளில் நீச்சலடிக்கும் போது மூக்கு செருகி இல்லாமல் நீந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இப்படியான நீர்நிலைகளில் ஆபத்தான அமீபா இருக்க நிறைய வாய்ப்புள்ளது.
* மூக்கை சுத்தம் செய்ய குழாய் நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, காய்ச்சி வடிகட்டிய அல்லது கிருமி நீக்கம் செய்யப்பட்ட நீரை மட்டும் பயன்படுத்துங்கள்.
* மூக்கை சுத்தம் செய்ய பயன்படுத்தும் நீரை கிருமி நீக்கம் செய்ய குளோரின் ப்ளீச் திரவம் அல்லது மாத்திரைகளைப் பயன்படுத்தலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, June 28, 2024, 13:01 [IST]
Desktop Bottom Promotion