கொத்தாக மடிந்த காகங்கள்.. சென்னையில் தலைதூக்கும் பறவை காய்ச்சல்.. இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க

Bird Flu Alert In Chennai: கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான காகங்கள் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து, அந்த காகங்களை ஆய்வு செய்து பார்த்ததில், காகங்களுக்கு H5N1 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை மத்திய அரவு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் தற்போது சென்னையில் பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் 1,000-க்கும் அதிகமான காகங்கள் இறந்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Bird Flu Alert In Chennai What Are The Symptoms of H5N1 And How People Can Stay Safe

அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதால், குறிப்பாக பறவை வாழ்விடங்களுக்கு அருகில் வசிப்பவர்கள், கோழிகளைக் கையாளுபவர்கள் அல்லது விலங்குகளுடன் வேலை செய்பவர்களுக்கு, இந்த தொற்றின் அபாயத்தைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

H5N1 என்றால் என்ன?

பொதுவாக H5N1 வைரஸ் தொற்றை பறவைக் காய்ச்சல் என்று அழைப்பர். இந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் பெரும்பாலும் மனிதர்களை நேரடியாக பரவுவதில்லை. பொதுவாக இந்த வைரஸ்கள் கோழி, வாத்துகள் மற்றும் பிற வீட்டு பறவைகளைப் பாதிக்கலாம். அரிதான மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் வைரஸால் பாதிக்கப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும் போது, அது மனிதர்களை பாதிக்கலாம். இந்த வைரஸ் உங்கள் மேல் சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல்களைப் பாதிக்கலாம். மேலும் சில நேரங்களில் உங்கள் மூளை போன்ற உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.

H5N1 வைரஸ் தொற்றின் அறிகுறிகள்

H5N1 வைரஸ் மனிதர்களை பாதித்தால், அது பின்வரும் அறிகுறிகளை வெளிக்காட்டும்.

* கடுமையான காய்ச்சல் (>100 டிகிரி F)
* இருமல்
* தொண்டை புண்
* குமட்டல் மற்றும் வாந்தி
* உடல் சோர்வு
* வயிற்றுப்போக்கு
* மூக்கு ஒழுகல் அல்லது மூக்கடைப்பு
* தசை வலி
* கண் தொற்று
* தீவிர நிலையில் நிமோனியா, சுவாப்பதில் சிரமம், வலிப்பு மற்றும் உறுப்பு செயலிழப்புகள் ஏற்படும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள்

H5N1 தொற்று மனிதர்களை தாக்கும் அபாயம் குறைவாகவே இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் பறவைகள் மற்றும் விலங்குகளை கையாளும் போது ஒருசில முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார மற்றும் விலங்கு நல அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

* காகங்கள், கோழிகள் மற்றும் நீர்ப்பறவைகள் உள்ளிட்ட நோய்வாய்ப்பட்ட, இறக்கும் நிலையில் இருக்கும் அல்லது இறந்த பறவைகளுடன் நேரடி தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.

* இறந்து போன பறவைகளை வெறும் கைகளால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே தொடுவதாக இருந்தாலும் கையுறைகள் அல்லது பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கைகளை நன்கு சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள்.

* உங்கள் வீட்டைச் சுற்றி பறவைகள் அசாதாரணமாக இறந்து கிடந்தால், உடனே உள்ளூர் கால்நடை அல்லது கால்நடை பராமரிப்புத் துறைகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

* கோழிகள் அல்லது விலங்குகளுக்கு தீவனத்தை போட்ட பின், சோப்பு பயன்படுத்தி சுத்தமான நீரில் கைகளைக் கழுவ வேண்டும்.

* இறந்த பறவைகள் அல்லது கோழிகளுடன் தொடர்பு கொண்ட பிறகு, காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

எனவே நண்பர்களே! உங்கள் வீட்டில் கோழி அல்லது பறவைகளை வளர்த்து வந்தால், சற்று கவனமாக கையாள்வதோடு, வீட்டில் யாருக்கேனும் உடல்நலம் சரியில்லாவிட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, February 6, 2026, 13:19 [IST]
Desktop Bottom Promotion