தலைமுடியின் அடர்த்தி குறையுதா? அப்ப வாரத்துக்கு 2 முறை ஆளி விதையை இப்படி பயன்படுத்துங்க...

Hair Care Tips In Tamil: தலைமுடி ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அப்படிப்பட்ட தலைமுடி நன்கு அடர்த்தியாக, மென்மையாக இருந்தால் தான் அது அழகான தோற்றத்தைத் தரும்.

ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம், மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவற்றால் தலைமுடி அதிகம் உதிர்வதோடு, அதன் அடர்த்தியும் குறைந்து, முடியின் வளர்ச்சியும் தடை ஏற்படுகிறது.

Hair Care Tips: How To Use Flax Seeds For Hair Growth In Tamil

இந்த தலைமுடி பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை ஆளி விதை வழங்கும். ஏனெனில் ஆளி விதையில் புரோட்டீன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மக்னீசியம், மாங்கனீசு, செலினியம் போன்ற தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.

ஆகவே இந்த ஆளி விதையைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்புக்களை கொடுக்கும் போது, தலைமுடி உதிர்வது குறைவதோடு, தலைமுடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும். இப்போது தலைமுடியின் வளர்ச்சிக்கு ஆளி விதையை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.

1. ஆளி விதை எண்ணெய்

தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆளி விதை எண்ணெயை தயாரித்து பயன்படுத்தலாம். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆளி விதை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடி முழுவதும் தடவி நன்கு சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

அதன் பின் சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியால் தலைமுடியைச் சுற்றி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால் தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படும்.

2. ஆளி விதை ஜெல்

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆளி விதை ஜெல்லைத் தயாரித்து பயன்படுத்தலாம். அதற்கு 1/4 கப் ஆளி விதையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து வெதுவெதுப்பாகும் வரை குளிர வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நிலையில் அதை தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் நல்ல பலனைப் பெறலாம்.

3. ஆளி விதை மற்றும் தேங்காய் எண்ணெய்

தலைமுடி அதிகம் உதிர்கிறதா? அப்படியானால் இந்த ஆளி விதை ஹேர் பேக்கை போடுங்கள். அதற்கு ஒரு கப் நீரில் 5 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை சேர்த்து, நன்கு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம். அதுவும் இந்த ஹேர் பேக்கை தலைமுடியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது நின்று முடி நன்க வளர்ச்சியடையும்.

4. ஆளி விதையை உட்கொள்ளவும்

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஆளி விதைகளை வெறுமனே தலைக்கு பயன்படுத்தாமல் உட்கொள்ளவும் செய்யலாம். இதனால் அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை தலைமுடியின் வலிமையை அதிகரிப்பதோடு, தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். அதற்கு வறுத்த ஆளி விதைகளை தினமும் காலையில் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

Story first published: Thursday, July 20, 2023, 17:00 [IST]
Desktop Bottom Promotion