சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்?

Posted By:

Mushroom Paneer Kadaai Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அதுவும் விடுமுறை நாட்கள் என்றால் காலையில் சப்பாத்தி செய்து, அதற்கு ஸ்பெஷலாக சைடு டிஷ் செய்து சாப்பிடுவீர்களா? உங்கள் வீட்டில் பன்னீரும், காளானும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு கடாய் மசாலா செய்யுங்கள். இந்த மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Mushroom Paneer Kadaai Masala How To Make This Delicious Gravy For Chapati

உங்களுக்கு காளான் பன்னீர் கடாய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் பன்னீர் கடாய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து பொடி செய்வதற்கு...

* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 10

மசாலா தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - சிறிது
* காளான் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* பட்டை - 2 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 3 ( வேக வைத்து, அரைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வறுத்து அரைத்த பவுடர்
* சுடுநீர் - 1 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம், முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 3 தக்காளியை சேர்த்து தக்காளியின் தோலுரியும் வரை வேக வைத்து எடுத்து, தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி, பன்னீரை பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் காளானை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு ப்ரை செய்து, ஒரு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த பொடியை சேர்த்து கிளறி, 1 1/2 கப் சுடுநீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள காளான் மற்றும் பன்னீரை சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான காளான் பன்னீர் கடாய் மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, July 17, 2026, 23:03 [IST]
Desktop Bottom Promotion