நாலு வருஷத்துக்கு முன்ன பிரிஞ்சு போனவ... திரும்பி வரும் போது கர்ப்பமா வந்தா... - My Story #299

நாலு வருஷத்துக்கு முன்ன பிரிஞ்சு போனவ... திரும்பி வரும் போது கர்ப்பமா வந்தா... - My Story #299

By Staff

கிட்டத்தட்ட நானும் அவளும் ஒருத்தர் கூட ஒருத்தர் பேசி, ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து நாலு வருஷத்துக்கு மேல இருக்கும்னு நினைக்கிறன். ஆமா! அவளுக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் இருக்கும்.

நாங்க ஒன்னும் பெருசா காவிய காதல் எல்லாம் பண்ணி கிழிச்சிடல... ஆனா, அவளோட குணாதியங்கள், பழக்கங்கள், லவ்ல அவளோட அணுகுமுறை எல்லாம் சாதாரணமா எல்லாரோட காதல்ல நடக்குற மாதிரியான, ஏற்படக் கூடிய ரியாக்ஷனா இருக்கல. அவ ரொம்பவே பிராக்டிக்கல்.

ஒரு மனுஷன்... அதுவும் ஒரு பொண்ணு இவ்வளோ பிராக்டிகலா.. என் லைப்ல அவள தவிர வேற யாரையும் நான் பார்க்கல. சிலருக்கு அவளோட மனப்பாங்கு தவறா தெரியலாம்.. ஆனா, ரியாலிட்டியில அதுதான் சரி... நம்ம மனசுக்கு மட்டும் தான் தெரியும்.. உள்ளக்குள்ள நாம எல்லாமே தனக்கான வாழ்க்கைய மட்டுமே வாழ்றவங்கன்னு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொதுநலம்...

பொதுநலம்...

எதுல பொதுநலம் இருக்கு... எல்லா கட்சியும் நல்ல ஆட்சி தான் கொடுக்க வரோம்னு சொல்றாங்க. ஆனா, யாரு கொடுக்குறா..? ஒருத்தர் நல்லது பண்ணாலும் அதுல ஒரு குற்றம் குறை கண்டுப்பிடிச்சு, அவங்கள கடுப்படிச்சி ஆட்சிய எப்படி கவிழ்த்துட்டு நாம வரலாம்னு தான் பார்க்குறாங்க. பொதுநலம் எல்லாம் எதுலையுமே இல்லை. காதல் உட்பட.

நம்ம எல்லாருக்குள்ளயும் சுய நலம் இருக்கு. நமக்கு பிடிச்ச மாதிரியான பொண்ணு, நமக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கணும்.. தினுமும் நமக்கு பிடிச்சது வடிச்சுக் கொட்டனும்... இதெல்லாம் என்ன பொதுநலமா? இன்னும் சிலர் அந்த மூணு நாள்ல கூட அவங்கள நிம்மதியா இருக்க விடமாட்டங்க... காதல்ங்கிறதே ஒரு பெரிய சுயநலம் தான்.

செட்டில்!

செட்டில்!

இங்க லவ் பண்ணும் போது நாம செட்டில் ஆகுறது பத்தி யோசிக்கிறதே இல்ல... தேவதாஸ் மாதிரி சினிமாட்டிக்கா லவ் பண்றவங்க யாரும்.. ரியாலிட்டியில எப்படி வாழனும், எது இருந்தா வாழ முடியும். குடும்பம் நடத்த குறைந்தபட்ச தேவைகள் என்னென்ன... ஒன்னும் தெரியாது.

இங்கே கல்யாணத்துக்கு முன்னவே செக்ஸ் வெச்சுக்க தெரியற பலருக்கு அட்லீஸ்ட் அபார்ஷன் பண்ணனும்னா... இல்ல குழந்தை பெற்றெடுக்க ஆப்ரேஷன் பண்ணனும்னா எவ்வளோ செலவாகும்னு கூட தெரியாது. நமக்க என்ன வேணுமோ அந்த சமயத்துல அது நடந்துட்டா போதும். நாளைக்கு தேவைய நாளைக்கு பார்த்துக்கலாம்.

அவ அப்படி இல்ல...

அவ அப்படி இல்ல...

அவ அப்படி இல்ல... நாளைக்கு மட்டுமில்ல... அதுக்கடுத்த நாளுக்கும் சேர்த்து இன்னிக்கி என்ன பண்ணனும்னு திட்டம்போட்டு வாழ தெரிஞ்ச அழகி. அதுனால தான் என்னவோ என்னோட சினிமாட்டிக் காதலுக்கு இம்ப்ரெஸ் மட்டுமே ஆன அவளுக்கு என்மேல முழுமையான நம்பிக்கையான காதல் வரல. ஒருவேள நான் இயல்பா என் காதல வெளிப்படுத்தி இருந்தா, என் காதல் கைக்கூடி இருக்குமோன்னு நான் யோசிச்சது உண்டு.

ஆனா, அவ சொன்ன காரணம் வேற...

கனவு...

கனவு...

நம்ம எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கு. அந்த கனவ அடைய நாம எப்படி உழைச்சா எவ்வளவு காலத்துல அடைய முடியும்னு ஒரு கணக்கு இருக்கு. என் வாழ்க்கை வேற, அவ வாழ்க்கை வேற. ஆனா, ரெண்டு பேருக்குமே ஒரு கனவு இருந்துச்சு. அவளோட வேகம் வேற, என்னோட வேகம் வேறங்கிறத தாண்டி... எங்க கனவுகள் இருந்த எல்லை கோடே வேற இடத்துல இருந்துச்சு.

எனக்கு படிக்கும் போது சினிமா டைரக்டர் ஆகணும்னு ஆசை. அது தான் என் கனவும். ஆனா, என் பலம் எழுதுறது. அதுக்கு நிறையா வேலை இருக்குன்னு எனக்கு அப்போ தெரியல. ஆனா, அவ தான் தெரிய வெச்சா... ஆனாலும், என் கனவு டைரக்டர் ஆகணும். ஒரு குருத்துத்தனமான கனவு.

விட்டுகொடுக்க முடியாது...

விட்டுகொடுக்க முடியாது...

கனவுக்காக எதையும் விட்டுக்கொடுக்க கூடாதுங்கிறது அவளோட கொள்கை. உன் கனவ அடையாம என்ன மட்டும் அடைஞ்சு என்ன பண்ண போறேன்னு கேட்டா. உண்மை தான். இந்த உலகத்துல ஒரு மனுஷனுக்கு அதிக வலி ஏற்படுத்துற இழப்பு கனவு. அவளோட பாதைய நோக்கி அவ நகர்ந்தா... என்னோட பாதைய நோக்கி நான் நகர்ந்தேன். ஆனாலும், போன் கால், மெசேஜ்னு ஏதோ ஒரு ரூபத்துல அவக்கூட டச்லயே தான் இருந்தேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி வர...

முடிவு!

முடிவு!

எனக்குள்ள டைரக்டர் ஆகணும்னு இருந்த கனவே போலியானது தான். விஸ்காம் படிக்கும் போது என் கூட படிச்ச பாதி பேருக்கு கனவு டைரக்டர் ஆகணும்கிறது. ஆனா, அது கனவில்ல.. ஒரு ஈர்ப்பு... விஸ்காம் படிக்க வரும் போது பலருக்கும் இந்த ஈர்ப்பு இருக்கும்.

ஆனால், காதல தராட்டியும்... எனக்குள்ள இருக்க என்னப்பத்தி அடையாளம் காமிச்சது அவ தான். எனக்குள்ள ஒரு குட்டி எழுத்தாளன் இருக்கான். அவன் வாலி, வைரமுத்து அளவுக்கு இல்லாட்டியும்... கொஞ்சம் நல்லா எழுதுவான்னு கண்டுபிடிச்சு சொன்னா.

ரைட்டர்...

ரைட்டர்...

இப்ப நான் ஒரு விளம்பர கம்பெனியில காபி ரைட்டரா வேலை பண்ணிட்டு இருக்கேன். நல்ல சம்பளம்.. நல்ல வாழ்க்கை... அதுக்கு காரணம் அவ தான். உண்மையான காதல் அழிக்காது, வாழ வைக்கும்னு சொல்லுவாங்க... நான் அவ மேல வெச்சிருந்தது உண்மையான காதல்... அவளுக்கு என் மேல காதல் இருந்துச்சான்னு எனக்கு தெரியல.. ஆனா, உண்மையான அக்கறையும் அன்பும் இருந்துச்சு.

அதுக்கு அப்பறம் அவளும் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டா... என் முழு கவனமும் வேலையில மட்டும் தான் இருந்துச்சு... நாலு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல...

மெசேஜ்!

மெசேஜ்!

ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒரு மெசேஜ்.. நான் நியூயார்க்ல இருந்து சென்னை வரேன்னு... நான் அவ ஆஸ்திரேலியாவுல இருக்கான்னு நெனச்சுட்டு இருந்தேன்... அவ சொல்லி தான் அவ நியூயார்க்ல இருக்கான்னு எனக்கு தெரியும்... 7 மாசம் கர்ப்பமா இருக்காளாம். பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு வரதா சொன்னா. நேரம் இருந்தா மீட் பண்ணலாம். வீட்டுக்கு வான்னு கூப்பிட்டா.

ஓகே!

ஓகே!

என்னன்னு சொல்றது... எனக்குள்ள நாலு வருஷமா பூட்டிக்கிடந்த காதல், அவள பார்க்கனும்னு இருந்த ஆர்வம் எல்லாம்... உடனே ஒகேனு ரிப்ளை பண்ண வெச்சது. போய் மீட் பண்ணேன். அப்படியே தான் இருந்தா. ஃபாரின் போனா சிலர் ஆளே மாறிடுவாங்க.

ஆனா, இவ அப்படி இல்ல. அதே தமிழ்நாட்டு பொண்ணா தான் இருந்தா. முடி வெட்டல, ஷார்ட் ஸ்கர்ட் போட பழகுல, மேக்கப், லிப்ஸ்டிக் எதுவுமே இல்ல. நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் கடைசியா அவள எப்படி பார்த்தனோ... அப்படியே... இருந்தா!

போதும்...

போதும்...

காதல்ங்கிறதே சேர்ந்து வாழ்றது மட்டுமில்ல.. ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சு வைக்கிறது கூட காதல் தான். எனக்குள்ள ஒருந்த ஒருத்தன புரிஞ்சுக்குற அளவுக்கு அவ என்ன ஸ்டடி பண்ணியிருக்கான்னா... நிச்சயமா அட்லீஸ்ட் அவ மனசுலயும் ஏதோ ஒரு மூலையில நான் இருந்திருக்கணும்ல... போதும்... அவன் மனசுல நான் இருந்தேன் / இருக்கேன்னு தெரிஞ்சதே போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, August 27, 2018, 17:08 [IST]
Desktop Bottom Promotion