மண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருக மன்னிப்பு கேளுங்கள் !

By Mayura Akilan

Husband Apologizes to Wife
நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும். தொழில் வேறுபாடுகள், தகுதி வேறுபாடுகள் பார்ப்பது, குறைகூறும் பெற்றோர் மற்றும் துணைவரால் தொல்லைகள் பெருகும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

அன்போடு கட்டித் தழுவுங்கள்

கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். தழுவல் உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள். அன்பு பன்மடங்காகும்.

அன்பான அக்கறை

அன்பு என்பது ஒன்றிணைக்கும் மனோபாவம். இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது அன்பு. சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு. அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகிறது. பலர் ஆதரவற்றோராக தவிக்கவிடப்படுகிறார்கள். அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால்! குடும்பத்தில் பிரச்சினையே இல்லை.

நம்பிக்கை அவசியம்

ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால் உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும் வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.

புரிந்து கொள்ளுங்கள்

புரிந்து கொள்ளுதல் இல்லாததால் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும்.

மன்னிப்பு கேளுங்கள்

கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

Story first published: Friday, March 9, 2012, 12:56 [IST]
Desktop Bottom Promotion