அருமையான...பஞ்சாபி சன்னா!!!

By Maha

Punjabi Channa
வட இந்திய உணவுகளில் சன்னா என்றால் மிகவும் பிரபலமானது. அதுவும் சப்பாத்தி, பூரி என்றால் சன்னா தான் சைடு டிஸ். அது போல் நம் வீட்டில் செய்யும் சப்பாத்திக்கும், பூரிக்கும் பஞ்சாபி சன்னா செய்து கொடுப்போமா!!!

தேவையான பொருட்கள் :

வெள்ளைக் கொண்டைக்கடலை - 250 கி
வெங்காயம் - 4
தக்காளி - 4
இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை :

1. முதலில் கொண்டைக்கடலையை இரவிலேயே நீரில் ஊற வைத்து விட வேண்டும்.

2. பின் மறுநாள் காலையில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் இந்த கொண்டைக்கடலையை கழுவி, சிறிது உப்பு போட்டு, 4-5 விசில் விட்டு இறக்கி வைக்கவும்.

3. வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின் தக்காளியை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு, அதன் தோலை உரித்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

4. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு அதில் அரைத்த அந்த வெங்காயக் கலவையைப் போட்டு வதக்கவும். பின் அதில் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. நெய்யும், கலவையும் பிரியும் வரை வதக்க வேண்டும். பின் அதில் அரைத்த தக்காளியை ஊற்றவும்.

6. பின் அதில் வேக வைத்த அந்த கொண்டைக்கடலையை போட்டு போதுமான அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

7. மசாலாவானது கெட்டியானதும் அதில் காய்ந்த மாங்காய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

8. இதோ சுவையான பஞ்சாபி சன்னா தயார்!!!

இதன் மேல் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டும், எலுமிச்சை சாற்றை பிளிந்தும் பரிமாறலாம். இதனால் உண்ணும் போது நன்கு மணமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். மேலும் இது சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Story first published: Thursday, June 14, 2012, 10:54 [IST]
Desktop Bottom Promotion