பருப்பு உருண்டைக்குழம்பு

By Mayura Akilan

Paruppu Urundai
கடலைப் பருப்பு, துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் காணப்படுகிறது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. இதனை அரைத்து உருண்டை பிடித்து குழம்பாக செய்து கொடுப்பது சுவையோடு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு – 200 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
புளி - எலுமிச்சையளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
சீரகம், சோம்புத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 3 தேக்கரண்டி
தேங்காய் – கால்மூடி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் – தாளிக்க தேவையானது

உருண்டைக் குழம்பு செய்முறை

கடலைப் பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் இரண்டு மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும். பருப்பிலிருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு அரைக்க வேண்டும். பாதிஅளவு வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து மிகப்பொடியாக நறுக்கவும். இவற்றை அரைத்த பருப்புடன் சேர்த்து உருண்டை பிடித்து இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் பத்து நிமிடம் வேகவைக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, கடுகு, உளுந்தப்பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும், அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு கிரேவியாக வரும் வரை வதக்கவும், அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி, அதனுடன் சோம்பு, சீரகத்தூள் சேர்த்து கிளறவும். பின்னர் புளியை கரைத்து ஊற்றவும்.

இதனுடன் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தேங்காயை மைய அரைத்து ஊற்றவும். நன்கு கொதி வந்த உடன் ஒவ்வொரு உருண்டையாக போட்டு வே விடவும். பருப்பு உருண்டைக்குழம்பு தயார். சூடாக சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

குறிப்பு:

பருப்பை வேக வைப்பதற்கு பதில் உருண்டையை எண்ணெயில் பொரித்தும் குழம்பில் போடலாம். சுவை சற்று கூடுதலாக கிடைக்கும். ஒருசிலர் வேகவைக்காமல் பச்சையாக உருண்டை பிடித்து போடுவதும் வழக்கம்.

Story first published: Monday, February 13, 2012, 14:04 [IST]
Desktop Bottom Promotion