பன்னீர் ஹரியாலி

By Maha

உணவுப் பொருட்களிலேயே பன்னீர் மிகவும் சுவையானது. அதிலும் இதன் ஒவ்வொரு ரெசிபியிலும், இதன் சுவை வித்தியாசமானதாகவே இருக்கும். மேலும் குழந்தைகளுக்கும் பன்னீர் மிகவும் பிடிக்கும். எனவே மதிய வேளையில் பன்னீரை சற்று வித்தியாசமான முறையில் வீட்டில் உள்ளோருக்கு, குழம்பு செய்து கொடுக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு பச்சை நிறத்தில் இருக்கும் பன்னீர் ஹரியாலி சரியானதாக இருக்கும்.

குறிப்பாக இது செய்வது என்பது மிகவும் எளிது. இப்போது அந்த பன்னீர் ஹரியாலியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
கொத்தமல்லி - 1 சிறிய கட்டு
புதினா - 1/2 கட்டு
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பற்கள்
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கொத்தமல்லி மற்றும் புதினாவை சுத்தம் செய்து, நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.

பின் கொத்தமல்லி இலை, புதினா இலை, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

அடுத்து, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, கிளறி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்பு மஞ்சள் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, 2 நிமிடம் பிரட்டி விடவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான பன்னீர் ஹரியாலி ரெடி!!!

Desktop Bottom Promotion