சத்தான... உளுந்து கஞ்சி

By Maha

உளுத்தம் பருப்பு உடலின் வலிமையை அதிகரிக்கும். அத்தகைய உளுத்தம் பருப்பை இட்லி, தோசை போன்றவை செய்வதற்கு தான் பயன்படுத்துவோம். ஆனால் இதனைக் கொண்டு காலை வேளையில் கஞ்சி செய்தும் சாப்பிடலாம்.

இங்கு அந்த உளுந்து கஞ்சியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கொஞ்சம் சமைத்து சுவைத்து தான் பாருங்களேன்...

Healthy Ulundu Kanji Recipe

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 5 கப்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கப்
பால் - 1/2 லிட்டர் (கொதிக்க வைத்தது)

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

பின்பு குக்கரை திறந்து, மத்து கொண்டு லேசாக கடைந்து, பின் சுக்கு பொடி, உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, கொதிக்க வைத்த பாலை ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், உளுந்து கஞ்சி ரெடி!!! இதனை ஏதேனும் துவையலுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Image Courtesy: yummytummyaarthi

Story first published: Saturday, April 25, 2015, 8:29 [IST]
Desktop Bottom Promotion