கேரட் மஞ்சூரியன்

By Maha

கேரட்டில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் வைட்டமின் ஏ என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சத்தானது அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய கேரட்டை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் இன்றியமையாதது. மேலும் கேரட் சாப்பிட்டால், கண்களுக்கு தேவையான சத்தான பீட்டா கரோட்டீன் உடலுக்கு அதிகம் கிடைத்து, கண் பார்வை கூர்மையாகும்.

ஆகவே இத்தகைய சக்தி வாய்ந்த கேரட்டை ஜூஸ் மட்டும் போட்டு குடிக்காமல், அதனை சற்று வித்தியாசமாக மஞ்சூரியன் செய்தும் சாப்பிடலாம். அந்த கேரட் மஞ்சூரியனை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து வீட்டில் செய்து பார்த்து, அந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கேரட் - 1/4 கிலோ (வட்டமாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி சாறு - 5 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

மாவிற்கு...

மைதா - 1/4 கப்
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கேரட் துண்டுகளை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி சாறு, சோயா மற்றும் சில்லி சாஸ் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

அடுத்து ஒரு கப்பில் சோள மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு, அதனை வாணலியில் ஊற்றி, ஒரு கொதி விட்டு, பின் வறுத்து வைத்துள்ள கேரட் போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, நீரானது சுண்டும் வரை கிளறி இறக்கினால், சுவையான கேரட் மஞ்சூரியன் ரெடி!!! இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சிறிது நேரம் மூடி வைத்து பரிமாறினால், சூப்பராக இருக்கும்.

Desktop Bottom Promotion