காளானை வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு கிரேவி செய்யுங்க.. அசைவ கிரேவியா-ன்னு கேப்பாங்க..

Posted By:

Varutharacha Mushroom Gravy Recipe In Tamil: புரட்டாசி மாதம் உங்கள் வீட்டில் அசைவம் செய்யமாட்டீர்களா? இதனால் அடிக்கடி காளானை செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே சுவையில் தான் காளான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை மசாலா அரைத்து கிரேவி செய்து பாருங்கள்.

இப்படி செய்யும் கிரேவியானது சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, நாண், பூரி, பரோட்டா போன்ற அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதுவும் இந்த கிரேவியின் சுவையானது அசைவ கிரேவியின் ருசியையே தோற்கடிக்கும் வகையில் அற்புதமாக இருக்கும்.

Varutharacha Mushroom Gravy How To Make a Varutharacha Mushroom Gravy

உங்களுக்கு வறுத்தரைச்ச காளான் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்தரைச்ச காளான் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15-20
* தக்காளி - 1
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 2 சிறிய துண்டு
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* காளான் - 300 கிராம்
* பெரிய உருளைக்கிழங்கு - 1
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் காளானை பெரிய துண்டுகளாக வெட்டி, சுடுநீரில் போட்டு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை தூவி, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த விழுதை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரிய வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் காளானை மற்றும் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 4 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, காய்கறிகளை கிளறி விட வேண்டும்.
* அடுத்து கிரேவிக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ, அவ்வளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி குக்கரை மூடி, 1 விசில் விட்டு இறக்கினால், சுவையான காளான் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 11, 2025, 14:53 [IST]
Desktop Bottom Promotion