1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Ulunthu Paal Kanji Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, அடிக்கடி ஏதாவது சத்தான பானங்களை செய்து கொடுப்பீர்களா? இதுவரை நீங்கள் உளுந்து பால் கஞ்சியை செய்துள்ளீர்களா? இந்த உளுந்து பால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இந்த உளுந்து பாலை காபி, டீ குடிப்பதற்கு பதிலாகவும் குடிக்கலாம். இல்லாவிட்டால் வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வருபவர்களுக்கு உடல் சூட்டையும், தாகத்தையும் தணிக்கும் ஒரு பானமாகவும் கொடுக்கலாம்.

Ulunthu Paal Kanji Recipe How To Make This Healthy Drink At Home In Tamil

இந்த உளுந்து பாலில் தேங்காய் பால் சேர்த்திருப்பதால், வயிற்றுப்புண் இருந்தாலும் சரியாகும். இந்த பானத்தை அனைத்து வயதினருமே குடிக்கலாம். முக்கியமாக எலும்பு தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் மற்றும் பெண் பிள்ளைகள் இந்த பானத்தைக் குடிப்பது மிகவும் நல்லது. முக்கியமாக இந்த பானம் தயாரிப்பதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த உளுந்து பால் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து பால் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்
* தண்ணீர் - 3 டம்ளர்
* தேங்காய் - 1 (நறுக்கியது)
* காய்ச்சி ஆற வைத்த பால் - 1/2 லிட்டர்
* நாட்டுச்சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஜவ்வரிசி - 2 கையளவு (வேக வைத்தது)
* ஐஸ்கட்டி - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் 1 டம்ளர் உளுத்தம் பருப்பை நீரில் நன்கு 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு கழுவிய அந்த உளுத்தம் பருப்பை குக்கரில் சேர்த்து, அத்துடன் 3 டம்ளர் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அந்த பருப்பை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஜவ்வரிசியை 10 நிமிடம் நீரில் ஊற வைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த உளுத்தம் மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் பால் சேர்க்காமல் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும்.
* பின்னர் அந்த பாத்திரத்தை அப்படியே அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து, அத்துடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கலந்து கொதி விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியாக தேங்காயை அரைத்து கெட்டியான பால் எடுத்து, அந்த தேங்காய் பாலை ஊற்றி கலந்து விட வேண்டும்.
* பிறகு அதில் ஜில்லென்று வேண்டுமானால் ஐஸ் கட்டியை சேர்த்தும் குடிக்கலாம். இல்லாவிட்டால் சூடாகவும் குடிக்கலாம்.

[ of 5 - Users]
Story first published: Sunday, June 7, 2026, 16:48 [IST]
Desktop Bottom Promotion