இந்த கஞ்சியை வாரத்துக்கு 2 முறை செஞ்சு குடிங்க.. உடலும் வலுபெறும்.. நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்..

Posted By:

Poondu Ulunthu Masala Kanji Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது கஞ்சி தயாரித்து குடியுங்கள். அதுவும் வெறும் அரிசி கஞ்சியை குடிக்காமல், சற்று வித்தியாசமாக பூண்டு உளுந்து மசாலா கஞ்சியை செய்து குடியுங்கள்.

இந்த கஞ்சி குளிர்காலத்தில் குடிக்க ஏற்றது, உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும். வளரும் பிள்ளைகளுக்கு இந்த கஞ்சியை கொடுப்பது நல்லது. கால் வலி, மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த கஞ்சியை வாரத்திற்கு 2 முறை செய்து குடித்தால், வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக இந்த கஞ்சி செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Ulunthu Kanji How To Make a Poondu Ulunthu Masala Kanji Recipe

உங்களுக்கு பூண்டு உளுந்து மசாலா கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு உளுந்து மசாலா கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கருப்பு உளுந்து - 1 கப்
* பச்சரிசி - 1/2 கப்
* தண்ணீர் - 3 கப்
* தேங்காய் பால் - 1 கப்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கேரட் - 1 (துருவியது)
* பூண்டு - 5 பல் (தட்டியது)
* மிளகு - 1 டீஸ்பூன் (தட்டியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - 1 கைப்பிடி
* சுடுநீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுந்து மற்றும் பச்சரிசியை எடுத்து நீரில் 2 முறை கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, ஒரு துணியில் போட்டு 5 நிமிடம் உலர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய உளுந்து மற்றும் பச்சரிசியை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்ததை போட்டு, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்ததை ஒரு கிண்ணத்தில் போட்டு அளவு பார்த்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவானது ஒரு பௌல் முழுவதும் இருந்தால், அந்த பௌலில் 3 கப் நீரை ஊற்ற வேண்டும்.
* பின் குக்கரை எடுத்து, அதில் அரைத்த பொடியை சேர்த்து, அத்துடன் 3 கப் நீர் மற்றும் 1 கப் தேங்காய் பாலை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம். துருகிய கேரட், பச்சை மிளகாய், தட்டி வைத்துள்ள 5 பல் பூண்டு, தட்டிய பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, புதினா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, உயர் தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கிளறி, தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கலந்து, துருவிய தேங்காய், கொத்தமல்லி மற்றும் நெய் ஊற்றி கிளறி பரிமாறினால், சுவையான பூண்டு உளுந்து மசாலா கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 16, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion