மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்..

Posted By:

Thakkali Pongal Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை தான் செய்வீர்களா? அதை விட்டால் பொங்கல் செய்வீர்களா? அப்படி நீங்கள் பொங்கல் செய்வதாக இருந்தால், அடுத்தமுறை வெறும் பொங்கலை செய்யாமல் தக்காளி பொங்கலை செய்யுங்கள். இந்த தக்காளி பொங்கல் கண்ணைக் கவரும் நிறத்தில் இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

Tomato Pongal How To Make Thakkali Pongal Recipe

முக்கியமாக இந்த பொங்கல் செய்வது மிகவும் சுலபம். இந்த பொங்கலுக்கு தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். ஒருமுறை இந்த பொங்கலை செய்தால், பின் எப்போதும் இந்த பொங்கலை தான் செய்ய வீட்டில் உள்ளோர் செய்ய சொல்லிக் கேட்பார்கள்.

உங்களுக்கு இந்த தக்காளி பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பழுத்த தக்காளி - 4
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* பச்சரிசி - 1/2 கப்

இடிப்பதற்கு...

* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்

வேக வைப்பதற்கு...

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* அரைத்த தக்காளி விழுது
* உப்பு - சுவைக்கேறப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கழுவிய அரிசி பாசிப்பருப்பு
* தண்ணீர் - 4 கப்

தாளிப்பதற்கு..

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* இடித்த மிளகு சீரகம்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் நன்கு பழுத்த தக்காளியை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்க வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை எடுத்துக் கொண்டு, அத்துடன் வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து நீரில் இரண்டு முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடிக்கல்லில் மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து லேசாக ஒருமுறை இடித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அரைத்த தக்காளியை சேர்த்து நீர் வற்றும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள அரிசி, பருப்பை சேர்த்து கிளறி, 4 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிளறி விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, இடித்து வைத்துள்ள மிளகு சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நல்ல மணம் வரும் வரை கிளறி இறக்கி, பொங்கலுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி பொங்கல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, September 10, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion