பூரிக்கு எப்பவும் ஒரே மாதிரி குருமா செய்யாம.. ஒருவாட்டி இந்த குருமாவை செய்யுங்க.. ருசி அள்ளும்..

Posted By:

Tomato Kurma For Poori In Tamil: பொதுவாக பண்டிகை காலங்களில் அனைவரும் விடுமுறையில் வீட்டில் இருப்பதால், பெரும்பாலான வீடுகளில் பூரி செய்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். உங்கள் வீட்டிலும் அப்படியான வழக்கம் உள்ளதா? மேலும் எப்போது பூரி செய்தாலும் ஒரே மாதிரியான குருமா அல்லது மசாலாவை செய்வீர்களா?

இப்படி ஒரே சுவையில் பூரிக்கு சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை தக்காளி குருமாவை செய்யுங்கள். இந்த தக்காளி குருமா, பாயா போன்ற சுவையில் இருப்பதால், பூரி, சப்பாத்தி, இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இப்படி குருமாவை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Thakkali Kurma How To Make a Tomato Kurma For Poori

உங்களுக்கு தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/4 மூடி
* முந்திரி - 10
* பச்சை மிளகாய் - 3
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 2 துண்டு
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* கல்பாசி - சிறிய துண்டு
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (பெரியதாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள துருவிய தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மிளகு, பூண்டு, இஞ்சி, சோம்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, மிளகு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான தக்காளி குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 1, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion