சர்க்கரைவள்ளிக் கிழங்கும், அவலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Sweet Potato Cake Recipe In Tamil: உங்கள் வீட்டில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு உள்ளதா? ஆனால் வீட்டில் உள்ளோர் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெறுமனே வேக வைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடமாட்டார்களா? அத்தகையவர்களை சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட வைக்க வேண்டுமா?

அப்படியானால் அந்த கிழங்குடன், சிவப்பு அவலை சேர்த்து கேக் செய்து கொடுங்கள். இந்த கேக் சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. மேலும் இந்த கேக் செய்வதற்கு சற்று நேரம் எடுத்தாலும், அதற்கேற்ப சுவை பிரமாதமாக இருக்கும். சொல்லப்போனால் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Sweet Potato Cake How To Make a Sweet Potato Cake

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1
* ஏலக்காய் - 2
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* நாட்டுச்சர்க்கரை - 1/4 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1 கப்

அவல் கலவைக்கு...

* தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் - 1
* சிவப்பு அவல் - 1 கப்
* நாட்டுச்சர்க்கரை - 1/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கப்பட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்து, அத்துடன் ஏலக்காய் சேர்த்து, 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1/4 கப் நாட்டுச்சர்க்கரை மற்றும் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கிளறி விட்டு நாட்டுச்சர்க்கரையை கரையவிட வேண்டும்.
* நாட்டுச்சர்க்கரை நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, பின் அதில் உப்பு மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்து நன்கு கிளறி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 1/2 கப் தேங்காய் மற்றும் ஏலக்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காயை போட்டு, அத்துடன் 1 கப் சிவப்பு அவல், 1/4 கப் நாட்டுச்சர்க்கரை மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்பு ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்து, அதனுள் பெரிய வாழை இலையை வைத்து, முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கு கலவையில் பாதியைப் போட்டு பரப்பி விட வேண்டும்.
* அதன் பின் மேலே அவல் கலவையை போட்டு பரப்பி விட வேண்டும்.
* அடுத்து அதன் மேல் மீதமுள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு கலவையை பரப்பி, மேலே 1 ஸ்பூன் நெய்யை பரப்பி விட வேண்டும்.
* பின் மேலே ஒரு வாழை இலையை வைத்து மூடி, பின் இட்லி பாத்திரத்தை மூடி அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து, 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, வாழை இலையை நீக்கிவிட்டு, தேவையான வடிவத்தில் வெட்டினால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு கேக் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, December 27, 2025, 19:05 [IST]
Desktop Bottom Promotion