கிளி மூக்கு மாங்காய் இருந்தா, ஒருவாட்டி இப்படி தால் செய்யுங்க.. சாதத்துக்கு அல்டிமேட்டா இருக்கும்..

Summer Special Manga Paruppu Recipe In Tamil: மாங்காய் சீசன் தொடங்கிவிட்டது. இந்த மாங்காய் சீசன் வந்தாலே பெரும்பாலான வீடுகளில் தினசரி ஏதாவது ஒரு வகையில் மாங்காயை உணவில் சேர்ப்பார்கள். முக்கியமாக மாங்காய் ஊறுகாயை செய்து, அது ஆண்டு முழுவதும் வைத்து சாப்பிடுவார்கள். இது தவிர மாங்காய் கொண்டே பலவிதமான ரெசிபிக்களை செய்யலாம்.

அதில் மாங்காய் பச்சடி, மாங்காய் சாம்பார், மாங்காய் துவையல், மாங்காய் ரசம், மாங்காய் சட்னி போன்றவை குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக மாங்காய் கொண்டு ஒரு அருமையான சுவையில் தால் செய்யலாம் தெரியுமா? இந்த மாங்காய் தால் அல்லது மாங்காய் பருப்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை அல்ட்டிமேட்டாக இருக்கும்.

Summer Special Manga Paruppu How To Make a Tangy Mango Paruppu

இந்த மாங்காய் பருப்பு ரெசிபியை ரேகா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு மாங்காய் பருப்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் பருப்பு ரெசிபியின் எளிய செய்முறை கொமுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கிளிமூக்கு மாங்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 4-5 பல்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு + 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் 2 முறை கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட கிளிமூக்கு மாங்காய், பச்சை மிளகாய், பூண்டு பற்கள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு நன்கு மசித்து விட வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் நீரை ஊற்றி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தாளித்ததை கொதித்துக் கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மாங்காய் பருப்பு தயார்.

Story first published: Wednesday, April 15, 2026, 13:53 [IST]
Desktop Bottom Promotion