உடல் சூட்டைக் குறைக்கும் மாங்காய் பானம் - தயாரிப்பது எப்படி?

Posted By:

Aam Ka Panna Recipe In Tamil: கோடைக்காலம் என்பதால் மாங்காய் சீசன் ஆரம்பித்திருக்கும். மார்கெட்டுகளில் மாங்காய் விலைக் குறைவில் விற்கப்பட்டு வரும். நீங்கள் மாங்காய் பிரியர் என்றால், மாங்காயை வெறுமனே சாப்பிடுவதற்கு பதிலாக, அவற்றைக் கொண்டு ஒரு பானம் தயாரித்துக் குடியுங்கள்.

அதுதான் ஆம் கா பண்ணா. இந்த மாங்காய் பானம் கோடையில் சந்திக்கும் உடல் சூட்டைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். முக்கியமாக இந்த பானம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் இருக்கும்.

Summer Special: Aam Ka Panna Recipe In Tamil

உங்களுக்கு இந்த ஆம் கா பண்ணா பானத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆம் கா பண்ணா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை மாங்காய் - 1
* சர்க்கரை - 1/4 கப் (தேவையான அளவு)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* புதினா - 10 இலைகள்
* குளிர்ந்த நீர் - தேவையான அளவு
* எலுமிச்சை சாறு - தேவையான அளவு (விருப்பமிருந்தால்)
* ஐஸ் கட்டிகள் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் சர்க்கரை, உப்பு, புதினா இலைகள், சீரகம், மிளகு ஆகியவற்றை எடுத்து நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் பச்சை மாங்காயை குக்கரில் போட்டு அது மூழ்கும் வரை நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மாங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதன் சதைப் பகுதியை மட்டும் எடுத்து, மிக்சர் ஜாரில் போட்டு, அதில் பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு அரைக்க வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி, அதில் 4 டேபிள் ஸ்பூன் அரைத்து வைத்துள்ள மாங்காய் கலவையை சேர்த்து, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது புதினா இலைகள், ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறினால், சுவையான பச்சை மாங்காய் பானம் தயார்.

குறிப்பு:

* மிக்சர் ஜாரில் அரைக்கும் போது, ஜார் ஈரமில்லாதவாறு இருக்க வேண்டும். மேலும் அரைக்கும் போது நீர் சேர்க்கக்கூடாது.
* சில வகையான மாங்காய் நார் அதிகம் கொண்டிருக்கும். அந்த மாதிரியான மாங்காயை பயன்படுத்தினால், நாரை நீக்கிவிட்டு, வெறும் சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்துங்கள்.
* இந்த பானத்தில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தையும் பயன்படுத்தலாம்.
* மாங்காய் கலவையை தயாரித்த பின், அதை ஒரு சுத்தமான கண்டெயினரில் போட்டு, தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
* முக்கியமாக பரிமாறும் போது, மேலே சிறிது மிளகுத் தூள் மற்றும் சீரகத்தூளைத் தூவி பரிமாறுங்கள். இது இன்னும் சுவையை கூட்டித் தரும்.

Image Courtesy: sharmispassions

[ of 5 - Users]
Story first published: Monday, May 8, 2023, 13:45 [IST]
Desktop Bottom Promotion