மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Soya Popcorn Recipe In Tamil: கோடை விடுமுறை என்பதால் வீட்டில் குழந்தைகள் எந்நேரமும் ஏதாவது சாப்பிட கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்போது எவ்வளவு தான் கடைகளில் வாங்கினாலும் அது போதாது. இப்படியே கடைகளில் வாங்கி கொடுத்தால் கட்டுபடியாகாது. எனவே வீட்டிலேயே பலவிதமான ரெசிபிக்களை செய்து கற்றுக் கொண்டால், குழந்தைகளுக்கும் வித்தியாசமாக செய்து கொடுத்தவாறு இருக்கும், பணமும் மிச்சமாகும்.

Soya Popcorn How To Make Mealmaker Popcorn Recipe

உங்கள் பிள்ளைகளுக்கு பாப்கார்ன் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் ஒருமுறை மீல்மேக்கர் பாப்கார்ன் செய்து கொடுங்கள். இந்த பாப்கார்ன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு ருசியாக இருக்கும்.

இந்த சோயா பாப்கார்ன் ரெசிபி குறித்து காத்துவாக்குலசமையல் என்னும் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த சோயா பாப்கார்ன்னை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோயா பாப்கார்ன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மீல்மேக்கர்/சோயா - 150 கிராம்
* பெரிய உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்தது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

பிற பொருட்கள்..

* மைதா - 100 கிராம்
* தண்ணீர் - 250 மிலி
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* பிரட் தூள் - 100 கிராம்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் சுடுநீரில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, பின் அதை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை கழுவி, அதிகப்படியான நீரை பிழிந்து வெளியேற்றிவிட வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் மீல் மேக்கரை சேர்த்து நீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த மீல் மேக்கரை எடுத்து, அத்துடன் வேக வைத்த 1 உருளைக்கிழங்கை சேர்த்து, கைகளால் கட்டிகளின்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்புத் தூள், கரம் மசாலா சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் மைதா, 1 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து, 250 மிலி நீரை ஊற்றி கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு தட்டில் பிரட் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒவ்வொரு உருண்டைகளையும் எடுத்து, மைதா கலவையில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டைகளை சேர்த்து, மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான மீல்மேக்கர் பாப்கார்ன் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 5, 2026, 17:33 [IST]
Desktop Bottom Promotion