சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Independence Day Special Tricolour Poori With Coconut Chutney Recipe In Tamil: சுதந்திர தினத்தன்று உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காலையில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும் ஒரு அற்புதமான காலை உணவை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பூரி பிடிக்குமா? அப்படியானால் மூவர்ண பூரியை செய்து கொடுங்கள். இந்த மூவர்ண பூரி நம் மூவர்ண கொடியை போன்றே இருக்கும். இந்த மூவர்ண பூரிக்கு சிம்பிளாக அதே சமயம் சுவையான கெட்டி தேங்காய் சட்னி செய்து சாப்பிட்டால், சுவை பிரமாதமாக இருக்கும்.

Independence Day Special Recipe How To Make Tricolor Poori With Coconut Chutney

உங்களுக்கு இந்த மூவர்ண பூரியும், கெட்டி தேங்காய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூவர்ண பூரி மற்றும் கெட்டி தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மூவர்ண பூரிக்கு..

* மைதா - 3 கப்
* ஆரஞ்சு நிற கேசரி பவுடர் - சிறிது
* பச்சை நிற கேசரி பவுடர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு

கெட்டி தேங்காய் சட்னிக்கு...

* எண்ணெய் - 2 ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5
* இஞ்சி - சிறிய துண்டு
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தேங்காய் - 1/4 மூடி
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் 3 கிண்ணத்தில் மைதா மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கிண்ணத்தில் உள்ள மாவில் ஆரஞ்சு நிற கேசரி பவுடரையும், மற்றொரு கிண்ணத்தில் பச்சை நிற கேசரி பவுடரையும் சேர்க்க வேண்டும்.
* பிறகு 3 கிண்ணத்திலும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
* அடுத்து 3 கிண்ணத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி பூரி மாவை பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் 3 வண்ண மாவையும் நெல்லிக்காய் அளவில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் 3 வண்ணங்களிலும் மாவு உருண்டைகளை எடுத்து, லேசாக நீள்வட்டமாக உருட்டி, மூவர்ண கொடி போன்று அடுக்கி, கைகளால் தட்டையாக அழுத்திவிட்டு, பின் வழக்கமாக பூரி தேய்ப்பது போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள மூவர்ண பூரிகளை போட்டு, முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், மொறுமொறுப்பான மூவர்ண பூரி தயார்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் 1/4 மூடி தேங்காய், 1/4 கப் பொட்டுக்கடலை, வதக்கிய பொருட்கள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது கெட்டி சட்னி என்பதால் நீரை அதிகம் ஊற்றிவிட வேண்டாம்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தேங்காய் கெட்டி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, August 15, 2026, 7:53 [IST]
Desktop Bottom Promotion