அரிசி தேங்காய் பாயாசம்

By Maha

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பலரும் பல வகையான இனிப்புக்களை சுவைத்து மகிழ்வார்கள். அதில் ஒன்று தான் பாயாசம். அதிலும் அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் சுவையாக இருக்கும்.

இங்கு அந்த அரிசி தேங்காய் பாயாசத்தின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

Arisi Thengai Payasam

Image courtesy

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1/2 கப்
பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 1/2 கப்
காய்ச்சிய பால் - 1/4 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 6
உலர் திராட்சை - 10

செய்முறை:

முதலில் வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை தட்டிப் போட்டு, லேசாக சூடேற்றி வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரிசியை நீரில் போட்டு நன்கு கழுவி, பின்னர் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்சியில் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் தேங்காய் போட்டு, சிறிது தண்ணீர் உற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள கலவையைப் போட்டு, நெருப்பைக் குறைத்து, நன்கு கிளறி விட வேண்டும்.

கலவையானது ஓரளவு மென்மையாகி கெட்டியானதும், அதில் வெல்லப் பாகு சேர்த்து, 3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். அதே நேரம் மற்றொரு அடுப்பில் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வதக்கி விட்டு, அதனை பாயாசத்துடன் சேர்த்து இறக்கினால் அரிசி தேங்காய் பாயாசம் ரெடி!!!

Story first published: Tuesday, April 14, 2015, 17:02 [IST]
Desktop Bottom Promotion