பசலைக்கீரை பக்கோடா

By Maha

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. மாலையில் நன்கு சூடாகவும், மொறுமொறுவென்றும் ஏதாவது செய்து சாப்பிட நினைத்தால், வீட்டில் பசலைக்கீரை இருந்தால், அப்போது அதனைக் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இது ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் கூட. மேலும் கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பசலைக்கீரையைக் கொண்டு பக்கோடா செய்து கொடுக்கலாம்.

இங்கு பசலைக்கீரையைக் கொண்டு எப்படி பக்கோடா செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Spinach Pakora

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 1 கட்டு
கடலை மாவு - 200 கிராம்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
ஓமம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் பசலைக்கீரையை நன்கு நீரில் அலசி, பின் அதில் உள்ள நீரை முற்றிலும் வடித்து, தண்டுப்பகுதியை நீக்கிவிட்டு, கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் கடலை மாவு, மிளகாய் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, ஓரளவு நீர்மமாக பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொன்னறிமாக பொரித்து எடுத்தால், பசலைக்கீரை பக்கோடா ரெடி!!!

Desktop Bottom Promotion