ரோட்டுக்கடை தண்ணி குருமா - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. இட்லி, தோசைக்கு சும்மா அள்ளும்...

Posted By:

Rottukadai Thanni Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு இன்னும் என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுக்கவில்லையா? அப்படியானால் எப்போதும் செய்வது போன்று சட்னி, சாம்பாரை செய்யாமல், ரோட்டுக்கடையில் கொடுக்கப்படும் தண்ணி குருமாவை செய்யுங்கள். இந்த ரோட்டுக்கடை தண்ணி குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

அதுவும் இந்த குருமா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். சிம்பிளாக அதே சமயம் வாய்க்கு ருசியாக ஏதேனும் சைடு டிஷ் செய்ய நினைத்தால், இந்த ரோட்டுக்கடை தண்ணி குருமாவை செய்யலாம். இது நிச்சயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

Rottukadai Thanni Kurma How To Make a Rottukadai Thanni Kurma Recipe

உங்களுக்கு ரோட்டுக்கடை தண்ணி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை தண்ணி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* நறுக்கிய தேங்காய் - 1 கைப்பிடி
* வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், வேர்க்கடலை, இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் சீரகம், மிளகு, சோம்பு, காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் குழம்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ரோட்டுக்கடை தண்ணி குருமா தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion