ரம்ஜானுக்கு ஸ்பெஷல் மட்டன் டிஷ் செய்யணுமா? அப்ப இந்த மலபார் மட்டன் குருமாவை செய்யுங்க..

Posted By:

Ramadan Special Malabar Mutton Kurma Recipe In Tamil: ரம்ஜான் பண்டிகை வரப் போகிறது. ரம்ஜான் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் பல சுவையான அசைவ உணவுகளை சமைப்பார்கள். குறிப்பாக இந்நாளில் மட்டன் ரெசிபிக்களை தான் அதிகம் சமைப்பார்கள். சிலர் ரம்ஜான் பண்டிகை அன்று மட்டனை வழக்கமாக செய்வது போன்று மட்டும் செய்யாமல், சற்று ஸ்பெஷலாக இதுவரை செய்திராத ஒரு ரெசிபியை செய்ய நினைப்பார்கள்.

நீங்களும் அப்படி நினைத்தால், மட்டனைக் கொண்டு மலபார் மட்டன் குருமாவை செய்யுங்கள். இது பிரியாணிக்கு அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இது வெள்ளை சாதத்துடனும் சாப்பிட நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Ramadan Recipes How To Make a Malabar Mutton Kurma Recipe

உங்களுக்கு மலபார் மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மலபார் மட்டன் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் - 1/2 கிலோ
* வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (தட்டியது)
* பூண்டு - 4 பல் (தட்டியது)
* பச்சை மிளகாய் - 6-8 (நறுக்கியது)
* கிராம்பு - 4
* பட்டை - 1 இன்ச் துண்டு
* ஏலக்காய் - 2
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* முந்திரி - 10 (நீரில் ஊற வைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மட்டனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி, பச்சை மிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவி வைத்துள்ள மட்டனில் இந்த அரைத்த மசாலாவை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
* பின்னர் அந்த மட்டனை குக்கரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 7 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் ஊற வைத்த முந்திரியை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த தேங்காய் விழுதை குக்கரில் வேக வைத்துள்ள மட்டனுடன் சேர்த்து கிளறி, அடுப்பில் வைத்து, நீர் வேண்டுமானால் சிறிது ஊற்றி கிளறி, சில நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி, அதை அப்படியே குருமாவுடன் சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மலபார் மட்டன் குருமா தயார்.

Image Courtesy: The Big Sweet Tooth

[ of 5 - Users]
Desktop Bottom Promotion