இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது..

Posted By:

Ragi Payaru Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் டயட்டில் காலை வேளையில் எப்போதும் சுவையில்லாத உணவை தான் சாப்பிடுவீர்களா? நாவிற்கு ருசியாகவும், அதே சமயம் உடல் எடையைக் குறைக்கவும் உதவும் காலை உணவை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு கஞ்சி பெரிதும் உதவி புரியும்.

Ragi Payaru Kanji How To Make This Healthy Kanji Recipe

அதுவும் ராகியுடன் பச்சை பயறு சேர்த்து கஞ்சி தயாரித்து குடித்து வரும் போது, உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். மேலும் இந்த கஞ்சியை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். இந்த கஞ்சி ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இந்த கஞ்சியை வாரத்திற்கு 3 முறை குடித்து வரும் போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இப்போது ராகி பயறு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பயறு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பச்சை பயறு - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 2 பல்

கஞ்சி செய்வதற்கு..

* ராகி மாவு - 1/4 கப்
* தண்ணீர் - 1 கப் + 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 3/4 கப்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து நீரில் 2 முறை கழுவி, நீரை ஊற்றி 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதேப் போல் மற்றொரு கிண்ணத்தில் பச்சை பயறை எடுத்துக் கொண்டு, நீரை ஊற்றி 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 5 மணிநேரம் கழித்து குக்கரில் ஊற வைத்த பச்சை பயறை கழுவி எடுத்துக் கொண்டு, அத்துடன் ஊற வைத்த வெந்தயத்தை நீருடன் அப்படியே சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் ராசி மாவை எடுத்துக் கொண்டு 1 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, நீர் சூடானதும், கலந்து வைத்துள்ள ராகி மாவை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* ராகி மாவானது நன்கு வெந்து, சற்று கெட்டியாகத் தொடங்கும் போது, அதில் வேக வைத்த பருப்புக்களை நீருடன் அப்படியே ஊற்றி கிளறி, 5-8 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து வேக வைக்க வேண்டும். பின் தீயை குறைத்துவிட்டு வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ராகியுடன் சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் 1 கறிவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தயாரித்த கஞ்சியுடன் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து, மேலே சிறிது துருவிய தேங்காயைத் தூவி பரிமாறினால், சுவையான ராகி பயறு கஞ்சி தயார்.

குறிப்பு: இந்த கஞ்சிக்கு கடைசியாக தாளிப்பு சேர்க்க பிடிக்காவிட்டால், சின்ன வெங்காயத்தை மட்டும் பொடியாக நறுக்கி சேர்த்து, அத்துடன் தேங்காய் துருவலையும் சேர்த்து கலந்து உட்கொள்ளலாம்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion