2 உருளைக்கிழங்கும், 1 வெங்காயமும் இருந்தா போதும்.. ஈவ்னிங் டைம்-ல சூப்பர் ஸ்நாக்ஸ் செய்யலாம்...

Posted By:

Potato Vada Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? பொதுவாக மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, அத்துடன் நன்கு சூடாகவும், மொறுமொறுப்பாகவும் பஜ்ஜி, போண்டா, வடை போன்றவற்றை சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான வடையைத் தான் செய்வீர்களா?

அப்படியானால் இன்று உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தைக் கொண்டு வடை செய்யுங்கள். பொதுவாக உருளைக்கிழங்கு கொண்டு பஜ்ஜி தான் செய்வார்கள். ஆனால் அதைத் துருவி வடை செய்தால், இன்னும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

Potato Vada How To Make A Urulaikilangu Vadai Recipe

உங்களுக்கு உருளைக்கிழங்கு வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு - 2
* பெரிய வெங்காயம் - 1
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். அதேப் போல் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும். பின் அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து அகற்றிவிட வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை எடுத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் அதில் துருவி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் கடலை மாவு சேர்த்து, கையால் நன்கு பிசைந்து விட வேண்டும். முக்கியமாக நீர் சேர்க்க வேண்டாம்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை வடைகளாக தட்டிப் போட்டு, மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு வடை தயார்.

Image Courtesy: Snazzy Cuisine

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 6, 2024, 17:39 [IST]
Desktop Bottom Promotion