1 கப் கோதுமை மாவை வெச்சு காலையில் இப்படியொரு முறை ட்ரை பண்ணிப் பாருங்க..

Posted By:

Potato Stuffed Egg Paratha Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை-ன்னு செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமான மற்றும் புதுமையான ரெசிபிக்களை செய்யுங்கள். இதனால் வீட்டில் உள்ளோர் காலை உணவை தவறாமல் சாப்பிடுவதோடு, விரும்பியும் சாப்பிடுவார்கள்.

அப்படியான ஒரு புதுமையான ரெசிபியைப் பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

Potato Stuffed Egg Paratha How To Make a Potato Stuffed Egg Paratha Recipe

உங்களுக்கு இந்த புதுமையான கோதுமை மாவு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - சிறிது
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்

உருளைக்கிழங்கு மசாலாவிற்கு...

* வேக வைத்த உருளைக்கிழங்கு - 3
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* எள்ளு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்

பிரட்டி எடுப்பதற்கு...

* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சிறி
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், எண்ணெய் ஊற்றி, கைகளால் கிளறி, பின் சிறிது நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 10 நிமிடம் மூடி வைத்து ஊற வைத்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் வேக வைத்த உருளைக்கிழங்கை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், சுவைக்கேற்ப உப்பு, சீரகம், எள்ளு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சிறிது, எலுமிச்சை சாறு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை இரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ஒரு துண்டு மாவை எடுத்து சப்பாத்திக்கு தேய்ப்பதை விட சற்று மெல்லியதாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் நடுவே சிறிது உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து சமமாக பரப்பி விட வேண்டும்.
* பிறகு ஒரு பக்க மாவை உருளைக்கிழங்கு கலவை வெளியே வராமல் இருக்க சிறிது மடித்து விட வேண்டும். அதேப் போல் எதிர் பக்க மாவையும் சிறிது மடித்து விட வேண்டும்.
* அடுத்து மீதமுள்ள மற்ற இரு எதிர்ரெதிர் பகுதிகளையும் சிறிது மடித்து விட்டு, பின் நீள் செவ்வக வடிவில் மடித்து லேசாக அழுத்தி விட வேண்டும். இதனால் உருளைக்கிழங்கு மசாலா வெளியே வராமல் இருக்கும்.
* பின் கத்தியைக் கொண்டு சற்று பெரிய சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று மற்றொரு உருண்டையையும் செய்ய வேண்டும்.
* அடுத்து இட்லி பாத்திரத்தில் இந்த துண்டுகளை வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி நன்கு குளிர்ந்த பின் எடுக்க வேண்டும். சூடாக இருக்கும் போது எடுத்தால் உடைந்துவிடும்.
* பின்னர் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, முட்டை கலவையில் பிரட்டி, தவாவில் போட்டு முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான ப்ரேக் ஃபாஸ்ட் தயார்.

Image Courtesy: Akshaya. com

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 11, 2024, 8:08 [IST]
Desktop Bottom Promotion